யாழ்ப்பாண பல்பலைக்கழகத்தை முற்றாக முடக்க பல்கலைக்கழக போதனைசார ஊழியர்கள் தீர்மானம் (காணொளி)

யாழ்ப்பாண பல்பலைக்கழகத்தை முற்றாக முடக்க பல்கலைக்கழக போதனைசார ஊழியர்கள் தீர்மானம் எடுத்துள்ளனர் என அறிய முடிகின்றது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஊழியர்கள் உள்ளிட்ட பல்கலைக்கழக மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் பணி புரியும் தற்காலிக மற்றும் சமயாசமய ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் நாடுமுழுவதும் தொடர்ச்சியான வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரால் கையெழுத்திட்டு வழங்கப்பட்ட உடன்பாட்டிற்கு இசைவாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமை, மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உயர்மட்ட பதவிகள் நிரப்பப்படுவதற்கான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாமை என்பனவற்றோடு அப்பதவிகள் மூலம் நிறைவேற்றப்பட வேண்டிய கடமைகளில் காணப்படும் சீரற்ற தன்மையை நிவர்த்தி செய்யும்படி போதனைசார ஊழியர்களால் வழங்கப்பட்ட அழுத்தத்தை கவனத்திற் கொள்ளாதமை ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே அவர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

,அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 24 தொழிற்சங்கங்கள் ஒருங்கிணைந்து இந்தத் தொடர் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை முன்னெடுக்கின்றன.

இந்த நிலையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக போதனைசார ஊழியர்கள் நாளை முதல் பல்கலைக்கழகத்தை முற்றாக முடக்கும் போராட்டத்தை முன்னெடுக்கின்றனர். அவர்களுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாக உத்தியோகத்தர்களும் ஆதரவளிப்பர் எனத் தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மின்குமிழ்கள் அணைக்கப்படல், நீர் விநியோகம் துண்டிக்கப்படல் உள்பட பிரதான வாயிற் கதவுகளை மூடி ஊழியர்கள் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளனர் என அறிய முடிகின்றது.