வளிமண்டலத்தில் மக்களுக்கு எச்சரிக்கை!

நாட்டில் சூழவுள்ள வளிமண்டலத்தில் அலைபோன்ற தளம்பல் ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காணரமாக நாட்டில் மழையுடன் கூடிய காலநிலை தொடரும் என்றும் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.

மேலும், மேகமூட்டம் மற்றும் மழையுடன் கூடிய காலநிலை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நிலவும் என்றும் மேற்படி திணைக்களம் அறிவித்துள்ளது.

குறிப்பாக தெற்கு, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை பொலன்னறுவை மாவட்டங்களிலும் சுமார் 100 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தென் மாகாணம் மற்றும் மன்னார் மாவட்டத்தில் 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்திற்கும் அதிகமாக பலத்த காற்று வீசக்கூடும். ஏனைய பிரதேசங்களில் 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும். சப்ரகமுவ மாகாணம் மற்றும் களுத்துறை மாவட்டத்தின் சில இடங்களிலும் சுமார் 75 மில்லிமீற்றர் மழை பதிவாகக்கூடும்.

நாட்டின் தென்மேல், தெற்கு மற்றும் தென்கிழக்கு கடற்பரப்பில் காணப்படும் இயங்குநிலை மேகக்கூட்டங்கள் காரணமாக களுத்துறையிலிருந்து காலி, ஹம்பாந்தோட்டை மற்றும் பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.

அவ்வேளையில் கடல் சடுதியாக கொந்தளிப்பாக காணப்படுவதுடன் காற்றின் வேகமானது சடுதியாக மணித்தியாலத்துக்கு 70 -80 கிலோமீற்றர்வரை அதிகரித்து வீசக்கூடும்.

நாட்டின் கடற்கரையோரப்பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். யாழ்ப்பாணத்திலிருந்து புத்தளம் ஊடாக நீர்கொழும்பு மற்றும் காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான ஆழமற்ற கரையோரப்பகுதிகளில் 50 தல் 60 கிலோமீற்றருக்கு அதிகாமான காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படுவதுடன் பலமான காற்று வீசக்கூடும் என்பதுடன் இடிமின்னலிலிருந்து பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.