வவுனியாவில் பிரபல தனியார் நிதி நிறுவனம் பொதுமக்களால் முற்றுகை!!

வவுனியா மில் வீதியில் அமைந்துள்ள தனியார் நிதி நிறுவனத்தினை பொதுமக்கள் முற்றுகையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த சம்பவம் நேற்று காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, அந்த நிதி நிறுவனத்தின் யாழ். மற்றும் கிளிநொச்சி கிளைகளில் வாகனங்களை பெற்றவர்களே இவ்வாறு முற்றுகையிட்டிருந்தனர்.இது தொடர்பில் பொது மக்கள் சார்பில் ஒருவர் கருத்து வெளியிடும் போது;நாளாந்த வட்டி செலுத்தும் முறை உள்ளதாக கூறினார்கள். ஆனால் மாதாந்த வட்டியினையே எம்மிடம் அறவிடுகின்றனர். பின்னர் குறித்த நிறுவனத்தில் ஒரு வாகனத்தினை பெற்றுக்கொண்டேன் அதற்கு வாகன வரிப்பத்திரம் முடிவடைந்து விட்டது.

அதனை பெற்றுக்கொள்வதற்கு அவர்களிடம் வாகன புத்தகத்தின் பிரதியினை கோரிய போது அவர்கள் என்னிடம் ஆயிரம் ரூபா பணத்தினை கோரினார்கள்.இதனை விட மூன்றாவதாக இவர்கள் செய்தவை நாளாந்த வட்டி செலுத்தும் முறையில் ஒரு வாகனத்தினை பெற்றுக்கொண்டேன் பின்னர் மறு தினமே முழுமையான பணத்தினை தருகின்றேன்.

லீசிங் வேண்டாமென தெரிவித்தேன்.இதற்கு எனக்கு பல காரணங்களை காட்டி என்னிடமிருந்து வட்டி பணத்தினை பெற்றுக்கொண்டனர். ஆனால் நான் இது வரை லீசிங் பெற்றுக்கொள்வதற்காக சாட்சியாளர்களின் எவ்வித ஆவணங்களும் வழங்கவில்லை. இவர்கள் எவ்வாறு எனக்கு லீசிங் வழங்குவார்கள். எந்த நிறுவனம் இது போன்ற பல மோசடிகளை செய்கின்றது.இவ்வாறு பாதிப்படைந்த பத்து நபர்கள் தற்போது இங்கு உள்ளோம். இவர்களினால் பலர் பாதிப்படைந்துள்ளனர். அவர்களின் விபரங்களை திரட்டி பாரிய அளவிலான போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம் .

சம்பவங்கள் தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட போதும் பொலிஸார் இருவருடனும் கலந்துரையாடி திகதியொன்றினை வழங்கியுள்ளனர்.ஆனால், அத் திகதியிலும் எவ்வித செயற்பாடுகளும் இடம்பெறவில்லை. ஊடகங்கள் மக்களை தெளிவுபடுத்தி இவ்வாறான நிதி நிறுவனங்களிடமிருந்து மக்களை காப்பாற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பாக குறித்த நிதி நிறுவனத்தின் வவுனியா முகாமையாளரை தொடர்பு கொண்டு வினாவிய போது,குறித்த விடயம் கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் காரியாலயத்துடன் தொடர்புடையது எமது காரியாலயத்தில் ஏதும் தவறு இருந்தால் தெரிவிக்கலாம்.கிளிநொச்சி முகாமையாளருக்கும் குறித்த வாடிக்கையாளருக்கும் ஏற்பட்ட தனிப்பட்ட முரண்பாடு இம்முற்றுகைக்கு காரணமாகவிருக்கலாம். இவர்கள் இவ்விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட கிளைகளையே நாட வேண்டும் எனக் கூறியுள்ளார்.