கண்டியில் முப்படையினரும் குவிப்பு – இணைப்பதிகாரியாக மேஜர் ஜெனரல் ருக்மன் டயஸ் நியமனம்

கண்டி மாவட்டத்தில் பாதுகாப்பைப் பலப்படுத்த முப்படையினரும் பணியில் அமர்த்தப்பட்டுள்ள அதேவேளை, சிறிலங்கா படையினருக்கும் காவல்துறையினருக்கும் இடையிலான ஒருங்கிணைப்பை மேற்கொள்வதற்கான அதிகாரியாக மேஜர் ஜெனரல் ருக்மன் டயஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

கண்டி மாவட்டத்தில் நிறுத்தப்பட்டுள்ள சிறிலங்கா படையினர் மற்றும் காவல்துறையினருக்கு இடையில் ஒருங்கிணைப்புப் பணியை மேற்கொள்வதற்காக இந்த நியமனம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, கண்டி மாவட்டத்திலர் 850 சிறிலங்கா இராணுவத்தினரும், 128 சிறிலங்கா கடற்படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், 250 சிறிலங்கா இராணுவத்தினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தேவைப்பட்டால் மேலதிக படையினரை ஏனைய பகுதிகளில் இருந்து அழைக்க முடியும் என்றும் சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கண்டி மாவட்டத்தில் தற்போது சிறிலங்கா இராணுவம், காவல்துறை, சிறப்பு அதிரடிப்படையுடன், கடற்படை மற்றும் விமானப்படையின் அணிகள் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.