முல்லைத்தீவில் யானையின் சாவுக்கு காரணமான சிறிலங்கா இராணுவ கப்டன் கைது

முல்லைத்தீவு- தேராவில் பகுதியில் காட்டு யானை ஒன்று மரணமடைந்த சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டு சிறிலங்கா இராணுவ அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தேராவில் பகுதியில் உள்ள 68-3 பிரிகேட்டைச் சேர்ந்த சிறிலங்கா இராணுவ முகாமில் இருந்து, சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்டிருந்த மின் இணைப்பில் சிக்கி  நேற்று அதிகாலை காட்டு யானை ஒன்று மரணமானது.

யானை இறந்த சம்பவத்தை அறிந்து அங்கு சென்ற சிறிலங்கா இராணுவத்தினர், மின்சார இணைப்பை அகற்றி தடயங்களை அழித்திருந்தனர்.

எனினும், இறந்துபோன யானையின் உடலை உடற்கூற்றியல் பரிசோதனைக்கு உட்படுத்திய மருத்துவர், மின்சாரம் தாக்கியே யானை மரணமானதாக தெரிவித்தார்.

 

இதையடுத்து, மின்சார இணைப்பை ஏற்படுத்தி, யானையின் சாவுக்கு காரணமான இராணுவ முகாம் பொறுப்பதிகாரியான கப்டனைக் கைது செய்த சிறிலங்கா காவல்துறையினர், அவரை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் நிறுத்தினர்.

அப்போது அவரை 1 இலட்சம் ரூபா பிணையில் செல்ல நீதிவான் அனுமதி அளித்துள்ளார்.