காடுகளால் மறைந்த வீடுகள்,வீதிகள்- காணிக்குள் சென்ற மக்கள் அதிர்ச்சி- வலி.வடக்கில் 36 ஏக்கர் காணிகள் விடுவிப்பு!!

வலிகாமம் வடக்கில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து 36 ஏக்கர் காணி இன்று மக்கள் பாவனைக்கு விடுவிக்கப்பட்டது. விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் சென்ற மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். காணிகள் இப்பிலிப்பிலி மரங்களால் மூடப்பட்டிருந்தன. தமது வீடுகளையோ ஒழுங்கைகளையோ இனங்காண முடியவில்லை. இராணுவத்தினர் பயன்படுத்திய தனியார் வீதியூடாகச் சென்று தமது காணிகளை பார்வையிட்டனர்.

ஜே/233 கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட மாம்பிராய் , மாங்கொல்லை பகுதிகளைச் சேர்ந்த 85 குடும்பங்களுக்குச் சொந்தமான 36 ஏக்கர் காணிகள் இன்று விடுவிக்கப்பட்டன என்று தெல்லிப்பழை பிரதேச செயலர் தெரிவித்தார்.

தமது சொந்த காணிகளை துப்புரவு செய்து மீள்குடியேறுவதற்கு வலி.வடக்கு பிரதேச செயலக மீள்குடியேற்ற செயலணி அதிகாரிகள் தமக்கு உதவி செய்ய வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.