மீட்புப் பணியில் ஈடுபட்ட பொலிசார் மாயம்!

மாதம்பை, கல்முறுவ பகுதியில் வீடொன்றில் சிக்கியிருந்தவர்களை மீட்கச்சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

மாதம்பை பொலிசாருக்கு கிடைத்த தகவலொன்றுக்கு அமைய, வெள்ளத்தில் மூழ்கிய வீடொன்றில் சிக்கிய நிலையில், நீரின் மட்டம் வெகுவாக அதிகரித்துச் செல்வதாக தெரிவித்து மேற்கொள்ளப்பட்ட அழைப்பை அடுத்து, பொலிஸ் குழுவொன்று அங்கு சென்றுள்ளது.

ஏரி ஒன்றுக்கு அருகில் இருந்த குறித்த வீட்டில் இருந்தவர்களை காப்பாற்றும் நோக்கில் அவ்வீட்டை நோக்கி, நீந்திச் சென்ற கான்ஸ்டபிள் சம்பத், வேகமாக வந்த அலையில் அடித்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்படை, இராணுவம் மற்றும் பொலிசார் இணைந்து முன்னாள் பொலிஸ் புலனாய்வுப் பிரிவு அதிகாரியான குறித்த கான்ஸ்டபிளை தேடும் பணியில், ஈடுபட்டுள்ளனர்.

குறித்த வீட்டில் சிக்கியிருந்தோர் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.