கடலுக்கு சென்ற யாழ். மீனவர்கள் மாயம்; தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள கடற்படை!

யாழ்ப்பாணம் குறிகட்டுவான் கடலிற்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மூவரைக் காணவில்லை என யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்.நாவாந்துறை வடக்குப் பகுதியைச் சேர்ந்த தோனிஸ் மல்கன் (வயது 44) உட்பட செபமாலை அலெக்ஸ் மற்றும் ரூபன் ஆகியோரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.,

நேற்று சனிக்கிழமை (26.05.2018) மதியம் குறிகட்டுவான் கடலிற்கு மீன்பிடிக்கச் செல்வதாக மனைவியிடம் கூறிச் சென்ற படகு உரிமையாளர் மற்றும் அவருடன் வேலைபார்க்கும் இருவரும், இன்று ஞாயிற்றுக்கிழமை (27.05.2018) காலை வரை வீடு திரும்பவில்லை. இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில் தோனிஸ் மல்கன் தனது மனைவிக்கு தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டு நடுக்கடலில் திசை தெரியாது நிற்பதாகவும், இந்த தகவலை நயினாதீவு கடற்படையினருக்கு அறிவிக்குமாறு தெரிவித்துள்ளார்.

அதன்பின்னர் தோனிஸ் மல்கனின் தொலைபேசி செயலிழந்து இருந்துள்ளது.

இதன்பின்னர், தோனிஸ் மல்கனின் மனைவி இன்று ஞாயிற்றுக்கிழமை (27.05.2018) யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

அந்த முறைப்பாட்டின் அடிப்படையில், யாழ்ப்பாணம் பொலிஸார் கடற்படையின் உதவியுடன் தேடுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும், யாழ்ப்பாணம் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.