மன்னார், லங்கா சதோச வளாகத்தில் அகழப்பட்ட மண்ணில் மனித எலும்பு எச்சங்கள் காணப்பட்டதை அடுத்து அந்த வாளாகத்தில் நேற்று அகழ்வுப் பணிகள் நடைபெற்றன.
மன்னார் நீதிவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் இந்த அகழ்வுப் பணிகள் நடைபெற்றன.
அந்தப் பகுதியில் சேகரிக்கப்பட்ட மண்ணில் மதியம் 1.30 மணியளவில் முதற்கட்ட அகழ்வுப் பணிகள் நடைபெற்றன. அதில் சந்தேகத்துக்கு இடமான எலும்பு எச்சங்கள், பற்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
அகழ்வுப் பணிகள் பிற்பகல் 4.15 மணியளவில் அங்கு நிறுத்தப்பட்டு, பி.ப. 4.30 மணியளவில் மன்னார் நகர நுழைவாயிலுக்கு அண்மையில் உள்ள லங்கா சதோச வளாகத்தில் முதல்கட்ட அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
இந்த அகழ்வுப் பணிகள் பி.ப. 5 மணியவில் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டன. இன்றும் அகழ்வுப் பணிகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
சிறப்பு சட்ட மருத்துவ நிபுணர் டபிள்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ச தலைமையிலான குழுவினரும், களனி பல்கலைக் கழகப் பேராசிரியர் ராஜ் சோம தேவா தலைமையிலான குழுவினரும் அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டனர்.
சட்டத்தரணிகளான வி.எஸ்.நிறஞ்சன், திருமதி ரனித்தா ஞானராஜ், சிறப்பு தடவியல் நிபுணத்துவப் பொலிஸார், அழைக்கப்பட்ட திணைக்கள அதிகாரிகள் ஆகியோரும் சம்பவ இடத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.