பாதசாரிகள் கடவையால் கடக்க முயன்றபோது வட்டுக்கோட்டைப் பொலிஸாரின் வாகனத்தில் மோதிப் படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.
வட்டுக்கோட்டை மேற்கைச் சேர்ந்த வேலுப்பிள்ளை மகேந்திரம் (வயது-65) என்பவரே உயிரிழந்தவராவார்.
இந்த விபத்துக் கடந்த 25ஆம் திகதி நடந்துள்ளது. வட்டுக்கோட்டை மாவடிச் சந்தியில் உள்ள கடையொன்றில் பொருள்களை வாங்கி வீடு திரும்பிய முதியவர் பாதசாரிகள் கடவையால் வீதியைக் கடந்துள்ளார். அப்போது வட்டுக்கோட்டைப் பொலிஸாரின் மோட்டார் சைக்கிள் அவரை மோதியது.
படுகாயமடைந்த முதியவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 3 நாள்கள் சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பயனின்றி நேற்றுக் காலை உயிரிழந்தார்.
இறப்புத் தொடர்பான விசாரணைகளை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டார்.