20 வயது மூத்த, லண்டன் வாழ் தமிழ் ஏஜென்ஸியின் காதல் விளையாட்டு; “வவுனியா குழந்தை கடத்தலின்” முழுமையான பின்னணி..! (படங்களுடன்)

வவுனியா குட்செட் வீதியில் மர்ம கும்பல் ஒன்றினால் நேற்று- 31.05.2018- அதிகாலை முகத்தை கறுப்பு துணியால் மூடிக்கட்டியபடி வந்த மர்ம கும்பல் கத்தியை காட்டி மிரட்டி, 08 மாத குழந்தையை கடத்திச் சென்றனர். சினிமா பாணியில் இந்த கடத்தல் நடந்தது.

குழந்தை இன்று பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்படலாமென எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த கடத்தல் ஏன் நடந்தது? இதன் பின்னணி என்ன? ஒரு அதிர்ச்சிகதையே பின்னணியில் இருப்பது தெரிந்தது….

கடத்தப்பட்ட எட்டு மாத குழந்தையான வானிஷனின் தாய், தந்தைக்கிடையில் இருந்த குடும்ப சிக்கலே இந்த கடத்தல் நடக்க காரணமாக இருந்துள்ளது.

கடத்தப்பட்ட குழந்தையின் தாய் மோனிஷாவும், தந்தை வசுதரனும் முரண்பாடு காரணமாக தற்போது சுமுகமற்ற உறவில் உள்ளனர். அவர்களிற்கிடையில் என்ன பிரச்சனை???

2013ஆம் ஆண்டு மோனிஷா 17 வயதாக இருந்த போது, பிரித்தானியா செல்வதற்கு முயற்சித்தார். அங்குள்ள அவரது உறவினர்கள் மூலமே இந்த ஏற்பாடு நடந்தது. இந்த சமயத்தில், இலண்டனில் இருந்த ஆசைப்பிள்ளை வசுதரன் என்பவனின் உதவியையும் நாடியுள்ளார் மோனிஷாவின் உறவினர். வசுதரனின் மகள் என கூறி, பிரித்தானியாவிற்கு அழைப்பதற்கான முயற்சிகள் நடந்தன.

இதற்காக மோனிஷாவை இந்தியாவிற்கு அழைத்தார் வசுதரன். அங்கிருந்து தான் சுலபமாக விசா பெற்று செல்லாமென கூறினார்.

தனது மூத்த சகோதரியுடன் இந்தியாவிற்கு கிளம்பி சென்றார் மோனிஷா. வசுதரனும் இந்தியா வந்தார். அங்கிருந்து பிரித்தானியா செல்வதற்கு முயற்சிகள் நடந்த போது, அவர்கள் இந்தியாவில் சில காலம் தங்கியிருந்தனர்.

இந்தியாவில் தங்கியிருந்த போது, வசுதரனிற்கும்- மோனிஷாவிற்குமிடையில் நெருக்கம் ஏற்பட்டு, அது காதலானது.

மோனிஷா அப்பொழுது 17வயதானவர். வசுதரனுக்கு அவரைவிட 20 வயது அதிகம்.

பின்னர், மோனிஷாவின் பிரித்தானிய பயண திட்டம் சரிவரவில்லை. அதனால் சில காலத்திலேயே மீண்டும் சகோதரியுடன் வவுனியாவிற்கு திரும்பி வந்தார்.

மோனிஷா வவுனியாவிற்கு சென்றாலும், அவரை விடாமல் துரத்தி காதலித்தான் வசுதரன். அடிக்கடி தொலைபேசியில் தொடர்பேற்படுத்தி காதலை வளர்த்தான். காதல் வளர்ந்தது.

இந்த இரகசிய காதலை எப்படியோ மோப்பம் பிடித்த மோனிஷாவின் பெற்றோர், மோனிஷாவை கண்டித்து, அவரை . அந்த காதலிற்கு தடை விதித்தனர்.

அப்போது வசுதரனை உயிருக்குஉயிராக காதலித்து வந்தார் மோனிஷா. அதனால் பெற்றோரின் கட்டுப்பாட்டை அவரால் ஏற்க முடியவில்லை. எப்படியோ, வீட்டுக்கு தெரியாமல் வசுதரனிற்கு தொலைபேசி அழைப்பேற்படுத்தி, தனது நிலைமை கூறியிருக்கிறார்.

வசுதரனின் ஏற்பாட்டின்படி, குடும்பத்தினர் சித்திரவதை செய்கிறார்கள் என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார் மோனிஷா. அத்துடன், யாழ்ப்பாணம் உரும்பிராயில் வீடொன்றை ஏற்பாடு செய்து, மோனிஷாவை அங்கு தங்க வைத்தார்.

வயதுக்கோளாறில் வசுதரனின் பேச்சை கேட்டு, தன்னை ஆளாக்கிய தாய், சகோதரி, சகோதரனை பிரிந்து யாழ்ப்பாணம் வந்தார். உரும்பிராயில் மோனிஷா தங்கியிருந்த போது, தேவையான பணத்தை வசுதரன் அனுப்பியுள்ளான்.

இப்படியே இருந்தால் எப்படி என யோசித்த வசுதரன், 2015 இல் மோனிஷாவை இந்தியாவிற்கு அழைத்து தாலி கட்டி, மனைவியாக்கினான். திருமணத்தின் பின்னர் பல தடவைகள் பிரித்தானியாவிலிருந்து இந்தியாவிற்கு வந்த வசுதரன், மோனிஷாவையும் அங்கு அழைத்து உல்லாசமாக இருந்துள்ளான். இதனால் மோனிஷா கர்ப்பம் தரித்தார்.

மோனிஷா கர்ப்பவதியானதும், அவரது பெற்றோருடன் சுமுகமான உறவு ஏற்பட்டது. அனைவரும் வவுனியாவில் ஒன்றாக இருப்பதென முடிவெடுத்து, வீடொன்றை வாடகைக்கு பெற்று வசித்தனர். 2017 ஒக்ரோபரில் மோனிஷா “வானிஷனை” பெற்றெடுத்தார்.

வானிஷன் பிறந்த சில மாதங்களில் தான் வசுதரனின் மன்மத வித்தைகளை அவர்(மோனிஷா) அறிந்தார். வசுதரனிற்கு ஏற்கனவே இரண்டு திருமணங்கள் நடந்துள்ளது, ஒரு மனைவி பிரித்தானியாவில், ஒரு மனைவி யாழ்ப்பாணத்தில் இருக்கிறார்கள். மோனிஷாவை விட 5 வயது குறைவான பிள்ளைகள் இருக்கிறார்கள்.

இதனால் விரக்தியடைந்த மோனிஷா, வசுதரனுடன் கடுமையான சண்டை பிடித்துள்ளார். இதனால் இருவருக்குமிடையில் முரண்பாடு உருவானது.

இதன்பின் சிறிதுகாலம் கழித்து, மீண்டும் மோனிஷாவிற்கு தொலைபேசி அழைப்பேற்படுத்தி வானிஷனை தனக்கு காட்டுமாறு தொல்லை கொடுக்க ஆரம்பித்துள்ளார். முன்னர் செய்த இரண்டு திருமணங்களை மறைத்ததால் பிள்ளையை காட்ட மறுத்து வந்தார் மோனிஷா .

மோனிஷாவை பழிவாங்கும் நோக்கத்துடன், வவுனியாவுடன் தொடர்புடைய முகப்புத்தகக பக்கமொன்றை உருவாக்கிய வசுதரன், மோனிஷாவுடன் எடுத்துக் கொண்ட அந்தரங்க புகைப்படங்களில் தனது படங்களை மறைத்து விட்டு வெளியிட ஆரம்பித்தார். இந்தபடங்களை மேலும் சில இணையத்தளங்களில் வெளியிட முயன்றும் வந்தார்.

அதுமட்டுமல்லாமல், திருகோணமலையை சேர்ந்த தனது இரண்டு நண்பர்களை அனுப்பி, ‘பிள்ளையை விரைவில் தூக்குவோம்’ என்று அச்சுறுத்தியுள்ளார். அத்துடன், தனது மூத்த சகோதரியின் மகனையும் வசுதரன் அனுப்பி அச்சுறுத்தியுள்ளார்.

இந்த சமயத்தில் மோனிஷா குடும்பம் வசித்த வாடகை வீட்டில் திருத்த வேலைகள் செய்ய வீட்டின் உரிமையாளர் தீர்மானித்திருந்தார். அதனால் அதேகாணியில்- அந்த வீட்டிற்கு பின்புறமிருந்த வீட்டில்- அவர்களை தங்க வைத்தார்.

இந்த நிலையில் 31.05.2018 அன்று இரவு 2.05 மணியளவில் 22 தொடக்கம் 25 வயது மதிக்கத்தக்க மூவர் முகத்தை நன்றாக மறைத்தபடி மதில்பாய்ந்து வீட்டு வளவிற்குள் நுழைந்துள்ளனர். மோனிஷா குடும்பம் முன்னர் வாழ்ந்த வீட்டிற்குள் நுழைந்தனர்.

அந்த வீட்டில் வேலை செய்பவர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். 52 வயதான ஒருவரை அழுத்திப் பிடித்து, அவரது கழுத்தில் கத்தியை வைத்து, பிள்ளை எங்கே என விசாரித்துள்ளனர். மற்றையவர்களை எழும்ப விடாமல் மரம் அரியும் வாளை வைத்து அச்சுறுத்தியுள்ளனர். அங்கு பிள்ளையில்லையென தெரிந்ததும், அந்த வீட்டிற்கு பின்புறம் இருந்த வீட்டுக்குள் நுழைந்தனர்.

வீட்டை பூட்டிவிட்டு மோனிஷா குடும்பம் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது. கதவை உடைத்துக் கொண்டு உள்நுழைந்த குண்டர்கள், 08 மாத குழந்தையான வானிஷனை தூக்கிக் கொண்டு தப்பியோடி சென்றனர். அவர்கள் முகத்தை மூடிக் கட்டியிருந்ததால் அடையாளம் காண முடியவில்லை.

இந்த சம்பவம் முடிந்து அதிகாலை 02.25 ஆன போது, வசுதரனிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. மோனிஷா அழுது கொண்டிருக்கும் சத்தத்தை கேட்ட பின்னர், தொலைபேசி அழைப்பை துண்டித்து விட்டான்.

உடனடியாக பொலிசாரிற்கு தகவல் கொடுக்கப்பட்டு, பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். தடயவியல் பொலிசாரும் பரிசோதனைகளை மேற்கொண்டனர். கடத்தல் தொடர்பாக பல கோணங்களில் விசாரணையை ஆரம்பித்துள்ள பொலிசார், வசுதரனின் சகோதரியின் மகனையும் விசாரணைக்கு உள்ளாக்கியிருந்தனர்.

இதன்பின்னர் வவுனியா பொலிசாருக்கு இலக்கத்தை மறைத்து மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி அழைப்பொன்றை வசுதரன் ஏற்படுத்தி பேசியுள்ளான். வானிஷனை நான்தான் கடத்தியுள்ளேன், மூன்று நாளின் பின் நீதிமன்றத்திற்கு கொண்டு வருவதாகவும் கூறி, தொலைபேசியை துண்டித்துள்ளான்.

 

வவுனியா குட்சைட் வீதியில் நேற்று அதிகாலை 2மணியளவில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்களினால் கடத்திச் செல்லப்பட்ட கைக்குழந்தை பத்திராம இருப்பதாக வவுனியா பொலிசாருக்கு கைக்குழந்தையின் தந்தை தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு பொலிசாரால் அழைக்கப்பட்டுள்ளதாகவும் நேற்று மாலை வெளிநாட்டிலுள்ள குழந்தையின் தந்தை வவுனியா பொலிசாருக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி கடத்திச் செல்லப்பட்டு கைக்குழந்தை பத்திராமக இருப்பதாகவும் அதனை ஒப்படைப்பதற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இன்று காலை பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற கைக்குழந்தையின் தாயார் மற்றும் உறவினர்கள் கடத்திச் செல்லப்பட்ட கைக்குழந்தையின் வரவினை எதிர்பார்த்து காத்திருக்கின்றார்கள்.