நடமாடும் உணவு வண்டியில் விற்பனை செய்யப்பட்ட பற்றிஸில் துருப்பிடித்த ஆணி இருந்தது என்று குற்றஞ்சாட்டப்பட்ட வியாபாரிக்கு ஐயாயிரம் ரூபா அபராதம் விதித்தது மன்னார் மாவட்ட நீதிமன்று.
மன்னார் சின்னக் கடைப் பகுதியில் தள்ளு வண்டியில் நடமாடும் சேவையில் சிற்றுண்டி வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் ஒருவரிடம் நுகர்வோர் ஒருவர் பற்றிஸ்கள் கொள்வளனவு செய்துள்ளார். அந்தப் பற்றிஸ்களில் ஒன்றில் துருப்பிடித்த ஆணி ஒன்று கண்டு பிடிக் கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.
நுகர்வோரால் மன்னார் பொதுச் சுகாதாரப் பரிசோதகரிடம் குறித்த விடயம் தொடர்பாகத் தெரிவிக்கப்பட்டது. பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஆராய்ந்து மன்னார் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தார். வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
விசாரணைகளின் போது மன்றில் முறைப்பாட்டாளரும் சந்தேக நபரும் முன்னிலையாகினர். வியாபாரி தனது குற்றத்தை ஏற்றுக் கொண்டார். இதனால் நீதிவான் 5 ஆயிரம் ரூபா அபராதம் விதித்ததுடன் தடை விதிக்கப்பட்டிருந்த அவரின் தொழிலைத் தொடர்ந்து மேற்கொள்ளவும் கட்டளை பிறப்பித்தார்.