திருகோணமலையில் பயங்கரம் : விதவைப் பெண்ணை துஸ்பிரயோகப்படுத்தி கழுத்தறுத்த கொடூரம்!!

திருகோணமலை – மூதூர் பிரதேசத்தில் மிகவும் பின்தங்கிய கிராமமான பாட்டாளிபுரத்தில் பெண்ணெருவர் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டு, கழுத்தறுத்து கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த பெண் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வேளையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளார். 5 பிள்ளைகளின் தாயான விதவைப் பெண்ணுக்கே இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் மற்றும் நீதித்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என திருகோணமலை மாவட்டத்தில் செயற்படும் பெண்கள் அமைப்பு பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த பெண் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டு கழுத்து அறுக்கப்பட் நிலையில் காணப்பட்டுள்ளார். பின்னர் குறித்த பெண்ணை பொலிஸாரின் உதவியுடன் தோப்பூர் வைத்தியசாலை ஊடாக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.

தற்போது, அவரால் பேசமுடியாத நிலை உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விடயத்தில் பல தவறான இளைஞர்கள் பங்குகொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

குறித்த பெண்ணை அவர்கள் பலாத்காரம் செய்து இறுதியில் கழுத்தை அறுத்து கொலை செய்யவும் துணிந்துள்ளார்கள்.

5 பிள்ளைகளின் தாயான குறித்த விதவைப் பெண்ணை பலர் சேர்ந்து இவ்வாறு சிதைத்து அவரைக் கொல்லத் துணிந்துள்ளமை பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது. எனவும் அவ்வமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இந்த சம்பவம் பல பெண்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. இவ்விடயத்தில் இன, மத, சாதி ஏற்றத்தாழ்வு பாராமல் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என அவ் அமைப்பு கோரிக்கை விடுக்கின்றது.