கணவர் கேட்ட ஒற்றை வார்த்தையால் உயிரைவிட்ட மனைவி!

திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதியில் 32 வயதுடைய பெண்ணொருவர் பேஸ்புக்கில் தனது புகைப்படத்தை பதிவேற்றம் செய்தமை தொடர்பாக அவரது கணவர் கேள்வி கேட்டமையினால் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று கிண்ணியா பதிவாகியுள்ளது.(trincomalee kinniya wife committed suicide)

கிண்ணியா பைசல் நகரை அண்மித்த கூபா நகரிலேயே இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.மூன்று வயதுடைய பிள்ளையின் தாயாரான ஆயிஷா (32) என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,கணவர் வெளிநாட்டில் தொழிலுக்காக சென்று இலங்கைக்கு வருகை தந்து 21 நாட்களேயாகும்.

இதேவேளை மனைவியான உயிரிழந்த பெண் தனது கையடக்க தொலைபேசியில் பேஸ்புக் கணக்கை உருவாக்க தனது கணவருக்கு விருப்பம் கேட்டுள்ளார்.

இதனையடுத்து அவர் தனது விருப்பத்தை தெரிவித்ததுடன் வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வந்த 21 நாட்கள் கழிந்த பின்னர் அதாவது நேற்று திங்கள்கிழமை இரவு குடும்ப உறவினர்கள் எல்லோரும் வீட்டில் இருக்கின்ற நேரத்தில் தனது மனைவியிடம் பேஸ்புக் அக்கவுண்ட் திறந்ததற்கான காரணம் பற்றி கேட்டுள்ளார்.

இதனால் அச்சம் கொண்ட ஆயிஷா, தனது கணவருக்கு இரவு சாப்பாட்டை கொடுத்து விட்டு தனது அறைக்குள் சென்றுள்ளார்.கணவர் சாப்பிட்டு முடிந்து பின் மனைவியை அழைத்துள்ளார்.

பலமுறை கூப்பிட்டும் மனைவி வெளியே வராத நிலையில் அறையின் கதவை உடைத்து பார்த்த போது உள்வீட்டின் அறையினுள் இருந்த மின்விசிறியில் மனைவி ஆயிஷா தொங்கிய நிலையில் காணப்பட்டதாக பொலிஸாரிடம் கணவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் சடலத்தை கிண்ணியா பொலிஸார் சட்ட வைத்திய பரிசோதனைக்காக இன்று செவ்வாய்க்கிழமை திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

திருகோணமலை பொது வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி துமிந்த நியுன்ஹெல்ல பரிசோதனையை மேற்கொண்டார்.

இப்பரிசோதனையின் போது தூக்கில் தொங்கி கழுத்து இறுகியமையினாலேயே இம்மரணம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் பொலிஸாருக்கு தெரியப்படுத்தினார்.உயிரிழந்த பெண்ணின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்ட்டது.