யாழில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த பெண் குழந்தை உயிரிழப்பு : ஊரே சோகத்தில்!!

உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட யாழ். சங்குவேலியைச் சேர்ந்த இரண்டரை வயதுப் பெண் குழந்தை உயிருடனிருப்பதாகத் தகவல்கள் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை நீங்கள் அனைவரும் அறிந்ததே.

இந்தநிலையில் நான்கு நாட்களின் பின்னர் நேற்று முன்தினம்(09.06) பிற்பகல் குழந்தை உயிரிழந்துள்ளதாகக் குழந்தையின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் நேற்று (10.06) காலை முதல் யாழ். சங்குவேலி கட்டுக்குளப் பிள்ளையார் கோயிலடியில் உயிரிழந்த குழந்தையின் இல்லத்தில் இறுதி அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

இறுதி அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து காலை 09.30 மணியளவில் பெற்றோர்,உறவினர்கள் மற்றும் ஊரவர்கள் கதறி அழ உயிரிழந்த குழந்தையின் சடலம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

சுமார் இரண்டு கிலோ மீற்றருக்கு அப்பாலுள்ள மானிப்பாய் கட்டுடை பிப்பிலி மயானத்தை முற்பகல் 10.30 மணியளவில் ஊர்வலம் சென்றடைந்ததைத் தொடர்ந்து உயிரிழந்த குழந்தையின் உடலம் நல்லடக்கம் செய்யப்பட்டது.

உயிரிழந்த குழந்தையின் இறுதி ஊர்வல நிகழ்வுகளில் குழந்தையின் தாய், தந்தை உட்படப் பெருமளவான ஊர்மக்கள் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாணத்தில் உயிரிழந்தவர்களின் இறுதி ஊர்வல நிகழ்வுகளில் பெண்கள் கலந்து கொள்ளாத நிலையில் குழந்தையின் உறவினர்கள் மற்றும் அயலவர்களான பெண்கள் சிலரும் குழந்தையின் இறுதி ஊர்வல நிகழ்வுகளில் கலந்து கொண்டமை முக்கிய அம்சமாக நோக்கப்படுகின்றது. மேற்படி குழந்தையின் மீது அவர்கள் வைத்திருந்த அளவுகடந்த பாசமே இதற்குக் காரணமாகும்.

உயிரிழந்த குழந்தையின் உடலம் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்ட வேளையில் அங்கு கூடியிருந்த பெற்றோர்கள், உறவினர்கள் மாத்திரமன்றி ஊர் இளைஞர்கள் பலரும் கண்ணீர் விட்டு அழுதமை பலரதும் மனதை உருக்குவதாக அமைந்திருந்தது.

கடந்த நான்கு நாட்களாக குறித்த குழந்தை உயிருடன் இருக்கிறது என உறவினர்கள், ஊரவர்கள் பலரும் நம்பியிருந்த நிலையில் குழந்தை மரணமடைந்து விட்டதைப் பலராலும் ஜீரணிக்க முடியவில்லை.

குழந்தை உயிரிழந்தாலும் குறித்த குழந்தையைப் பலரும் அதிசயக் குழந்தையாகவே நோக்குகிறார்கள். இதனை இன்றைய இறுதி அஞ்சலி நிகழ்வுகளில் கலந்து கொண்டவர்களால் அவதானிக்க முடிந்தது.

சுட்டிப் பெண்ணாகத் துள்ளித் திரிந்து அனைவரையும் எளிதில் கவர்ந்திழுத்ததுடன் ‘அம்மு’ என்ற செல்லப் பெயரால் அழைக்கப்பட்ட நிசாந்தன் டிவேனிதாவின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.