இறப்பதற்கு முன்னதாகவே சவப்பெட்டியுடன் சென்ற நபர் : அதிர்ச்சியில் உறைந்த கிராமம்!!

மீரிகம தலாகொலயாய பிரதேசத்தில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர், இறப்பதற்கு முன்னதாகவே சவப்பெட்டியை கொள்வனவு செய்து வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளார்.

வீட்டில் எவரும் மரணிக்காத நிலையில் குறித்த ஹோட்டல் உரிமையாளர் அண்மையில் சவப்பெட்டி மற்றும் மரண வீடுகளில் பயன்படுத்தப்படும் ஏனைய அலங்காரப் பொருட்கள் அனைத்தையும் மலர்சாலையொன்றிலிருந்து கொள்வனவு செய்து வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளார்.

வீட்டில் மரணம் நிகழாத நிலையல் சவப்பெட்டி வீட்டுக்கு எடுத்துச் சென்றமை குறித்து சந்தேகம் ஏற்பட்ட அயலவர்கள் இது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்த முறைப்பாடு தொடர்பில் விசாரணை நடத்திய பொலிஸார் வீட்டுடன் கூடிய ஹோட்டலை சோதனையிட்ட போது சவப்பெட்டி உள்ளிட்ட பொருட்களை கண்டு ஆச்சரியமடைந்துள்ளனர்.

மரணம் நிகழாத நிலையில் ஏன் இவ்வாறு சவப்பெட்டி கொள்வனவு செய்யப்பட்டது என பொலிஸார் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதன் போது, குடும்பத்தினர் தம்மை ஒழுங்காக கவனிப்பதில்லை எனவும் அவர்களை அச்சுறுத்தும் நோக்கில் சவப்பெட்டி கொள்வனவு செய்தாகவும் ஹோட்டல் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

சவப்பெட்டியொன்றை வீட்டில் வைத்திருப்பது சட்ட விரோதமான செயல் கிடையாது என்ற போதிலும், சவப்பெட்டியை மீளவும் மலர்ச்சாலையில் ஒப்படைக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.

வீட்டில் மரணம் நிகழ்ந்துள்ளதாகவும் சடலம் கொண்டு வரப்பட்டதன் பின்னர் பெட்டியில் வைத்துக் கொள்வதாகக் கூறி ஹோட்டல் உரிமையாளர் இவ்வாறு சவப்பெட்டி உள்ளிட்ட பொருட்களை கொள்வனவு செய்ததாக மலர்ச்சாலை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.