வரணி சிமிழ் அம்மன் ஆலயத்தில் ஈடுபாடுடைய 80 வயது மூதாட்டி மனஉளைச்சலால் மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் வரணி சிமிழ் அம்மன் கோவிலடிப் பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.இதே இடத்தை பிறப்பிடமாகக் கொண்ட மூதாட்டி, யாழ்ப்பாணத்தில் பிள்ளைகளுடன் அண்மைக்காலமாக தங்கியிருந்துள்ளார்.
மூதாட்டியின் உறவினர்களால் பரம்பரை பரம்பரையாக மேற்கொண்டு வரும் திருவிழாவுக்கு ஊருக்கு வந்த அவர் தேர்த் திருவிழாவில் கலந்து கொண்டிருந்தார்.
ஆலயத்தின் தேர்த் திருவிழாவில் இயந்திரம் மூலம் தேர் இழுக்கப்பட்டதை வன்மையாகக் கண்டித்த மூதாட்டி மூன்று தினங்களாக மன உளைச்சலுக்கு உள்ளான நிலையில் காணப்பட்டார் எனவும் நேற்றுமுன்தினம் மாலை உறவினருடன் உரையாடிக் கொண்டிருந்த வேளையில் மயங்கி வீழ்ந்துள்ளார்.அங்கிருந்து வாகனம் மூலம் வரணி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். பின்னர் சாவகச்சேரி மருத்துவமனைக்கு கொண்டு வரும்வழியில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நிலையில் மருத்துவமனைக்கு சடலம் கொண்டு வரப்பட்டதால் சாவு விசாரணைக்காக மருத்துவமனை சவச்சாலையில் சடலம் வைக்கப்பட்டிருந்தது. கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு நீதிவான் முன்னிலையில் நேற்று அறிக்கை தாக்கல் செய்திருந்தனர்.அறிக்கையினைப் பார்வையிட்ட நீதிவான் பிரதேச திடீர் சாவு விசாரணை அதிகாரி சீ.சீ.இளங்கீரன்
மூலம் சாவு விசாரணைகளை நடாத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது