கிளிநொச்சி இளைஞனின் மரணத்தில் 30,000 ரூபாய்க்கு என்ன நடந்தது? நண்பன் விளக்கம்

கொழும்பு – தாமரை கோபுரத்தில் இருந்து விழுந்த கிளிநொச்சி இளைஞன் கோணேஸ்வரன் நிதர்ஷனின் மரணத்தில் பிரதேசசபை உறுப்பினர் பணத்தை கையகப்படுத்தியதாக சிலர் வதந்தியை பரப்பியியுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் இளைஞர் அணி தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் முகப்புத்தகத்தில் அவர் தெளிவுப்படுத்தியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

கிளிநொச்சி இளைஞன் கோணேஸ்வரன் நிதர்ஷனின் மரணத்தில் பிரதேச சபை உறுப்பினர் பணத்தை சுறுட்டினார் என்ற வதந்தி கடந்த சில நாட்களாக பரவி வருகின்றது.

இறந்த தனிநபர் சடலங்களை குறைந்த செலவில் உரிய இடத்திற்கு கொண்டு செல்வது இலங்கை செஞ்சிலுவை சங்கத்திடம் உள்ள ஒரு வழக்கம்.

இந்த விடயம் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தனது வட்டார இளைஞன் நிதர்சனின் மரணத்தை தொடர்ந்து செஞ்சிலுவை சங்கத்தின் உதவியை நாடி அந்த வாய்ப்பை பெற்று சடலத்தை உரிய இடத்தில் சேர்த்து பின்னர் அதற்கான பணம் 30,000 ரூபாவை செஞ்சிலுவை சங்கத்தாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அதாவது சடலத்தை கொழும்புக்கு சென்று ஏற்றி வந்து கிளிநொச்சியில் ஒப்படைத்த பணம் தான் அந்த 30,000 ரூபாய்.

குறித்த பணத்தை பிரதேசசபை உறுப்பினர் கையகப்படுத்தியதாக சிலர் வதந்தியை பரப்பியுள்ளனர்.

இளைஞன் நிதர்சன் எனது நெருங்கிய நண்பன் மட்டுமல்ல இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் சுறுசுறுப்பான தொண்டனும் ஆவார்.

இதில் மோசடிகளோ விதிமுறை மீறல்களோ நிகழவில்லை என்பதை என்னால் உறுதியாக கூறமுடியும் எனவும் பதிவிட்டுள்ளார்.

யுத்த காலத்தில் இராணுவத்தினருக்கும், புலிகளிற்கும் இடையே இறந்த உடல்களை பரிமாற்றுவதிலும் செங்சிலுவை சங்கமே முன்னின்று செயற்பட்டது.

அது தனக்கெண்டே தனித்துவ கொள்கைகைகள் கட்டுப்பாடுகள் கொண்ட ஓர் சர்வதேச அமைப்பு எனவும் கிளிநொச்சி மாவட்ட இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் இளைஞர் அணி தலைவர் குறிப்பிட்டுள்ளார்.