சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு கொலை -மீட்கப்படும் மனித எச்சங்களில் சந்தேகம்!!

மன்னார் சதொச மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்டுவரும் மனித எச்சங்கள், கொடூரமான சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டவர்களுடையதாக இருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக பணியாற்றும் சட்டத்தரணிகள் குழாம் இந்த சந்தேகத்தை வெளியிட்டுள்ளது.

மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் மனித எச்சங்களை தேடும் பணிகள் நேற்று புதன்கிழமை 13 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் மாவட்ட நீதிமன்ற நீதவான் ஆசீர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஜா முன்னிலையில் மேற்கொள்ளப்படும் அகழ்வுப் பணிகளில், இரண்டு முழு மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதில் ஒன்று இரண்டு கைகளும் ஒன்றின் மேல் ஒன்று இருந்த நிலையில் காணப்படுவதால், அது கட்டப்பட்ட ஒன்றாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரும்புகளால் கட்டப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டவரின் மனித எச்சமாக இருக்கலாம் எனவும் சட்டத்தரணிகள் குழாம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளில் 29 மண்டையோடுகளுடன் கூடிய மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.