விடுதலைப் புலிகள் மறைத்து வைத்த தங்கத்தை தேடிச் அதிசொகுசு காரில் பயணித்த நால்வர் கைது!!

இறுதி யுத்த காலத்தில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களில் விடுதலைப் புலிகளால் நிலத்தில் புதைக்கப்பட்டுள்ள தங்கத்தை தேடி எடுப்பதற்காக, சென்ற நான்கு பேர் ஸ்கானர் இயந்திரத்துடன், கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா, நொச்சிமோட்டைப் பிரதேசத்தில் வைத்து, இன்று (15) காலை காவற்துறையின் விசேட அதிரடிப் படையினரால் இவர்களை கைது செய்யப்பட்டதாக வவுனியா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காவற்துறை விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த புலனாய்வுத் தகவல் ஒன்றின் படி மேற்கொண்ட திடீர் வீதித் தடை சோதனையின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த ஸ்கானர் இயந்திரம் சுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியானது என்றும் காவற்துறையினர் தெரிவித்தனர். கம்பஹா மற்றும் எம்பிலிபிட்டிய பிரதேசங்களை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும் இயந்திரமும் வவுனியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதுடன், வவுனியா காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.