58 லட்சம் ரூபா பெறுமதியான ஸ்கானர் இயந்திரத்துடன் புலிகளின் புதையலை தேடியவர் பொலிஸாரால் கைது!!

கிளிநொச்சி, அறிவியல்நகர் பகுதியில் நவீன உபகரணமொன்றின் உதவியுடன் விடுதலை புலிகளின் புதையல் தேடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த பகுதி நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு சுற்றிவளைக்கப்பட்டு, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நவீன ரக ஸ்கேனர் உபகரணத்தை பயன்படுத்தி குறித்த தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஸ்கேனரின் மதிப்பு 58 லட்சம் ரூபாய் எனத் தெரிவிக்கப்படுகிறது.குறித்த தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இருவரில் ஒருவர் தப்பிச் சென்ற நிலையில், ஒருவர் அதிரடிப் படையினரிடம் சிக்கியுள்ளார். அத்துடன் தேடுதல் நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்ட ஸ்கேனர் இயந்திரத்தையும் அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்டவரும், ஸ்கேனர் இயந்திரமும் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு, மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர் பூநகரி நல்லூர் பகுதியை சேர்ந்த 43 வயதுடைய ஒருவர் என பொலிஸார் அடையாளப்படுத்தியுள்ளனர்.கடந்த ஓரிரு மாதத்திற்கு முன்னர் குறித்த பகுதியில் விடுதலைபுலிகளினால் புதைக்கப்பட்ட கொள்கலன் தொடர்பில் பொலிஸாரால் தேடுதல் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.