அமெரிக்காவில் 49 வயதில் திருமதி உலக அழகி பட்டம் வென்ற தமிழ்ப் பெண்

கோவை சவுரிபாளையத்தை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ மகேஷ் (வயது 49). இவர் உடற்பயிற்சி சிகிச்சை நிபுணராக உள்ளார். இவருடைய கணவர் மகேஷ்குமார் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.ஜெயஸ்ரீ மகேஷ் அமெரிக்காவில் கடந்த 13-ந் தேதி முதல் 18-ந்தேதி வரை 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்காக நடந்த திருமதி உலக அழகி போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டார்.

இதில் உலகம் முழுவதும் இருந்து பல்வேறு நாடுகளை சேர்ந்த 85 பேர் கலந்து கொண்டனர். இதில் திருமதி உலக அழகி பட்டத்தை ஜெயஸ்ரீ மகேஷ் வென்றார்.இவர் ஏற்கனவே கடந்த 2006-ம் ஆண்டு திருமதி கோவை அழகி பட்டத்தையும், 2016-ம் ஆண்டு திருமதி இந்திய அழகி பட்டத்தையும் வென்றுள்ளார்.

திருமதி உலக அழகி பட்டம் வென்ற ஜெயஸ்ரீ மகேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-அமெரிக்காவில் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான திருமதி உலக அழகி போட்டி நடைபெற்றது. பல்வேறு நாடுகளை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்ட இந்த போட்டியில் வெற்றி பெற்றது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. சிறு வயது முதலே சாதிக்க வேண்டும் என்று நினைத்து கடுமையாக உழைத்தேன். அதற்கான பலன் தற்போது கிடைத்து உள்ளது.

இந்தியாவில் ஆரம்ப காலத்தில் கூட்டு குடும்பங்கள் அதிகமாக இருந்தன. இதனால் குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் தங்களது அனுபவத்தின் மூலம் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கினர்.

தனிக்குடும்ப முறை காரணமாக பெற்றோர்களால் தங்களது பிள்ளைகளை சரிவர கண்காணிக்க முடியாமல் போய் விடுகிறது. தற்போது கணவன், மனைவி இருவரும் பணிக்கு செல்கின்றனர். இதனால் குழந்தைகள் தனிமையில் இருக்கின்றனர். இந்த தனிமையை சில நபர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு பெண் குழந்தைகளிடம் அத்துமீறுகின்றனர். கூட்டுகுடும்ப முறை குறைந்து வருவதே இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிக்க காரணம்.

பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் என்ன செய்கின்றனர், யாருடன் பழகுகின்றனர், அவர்களின் நட்பு வட்டாரத்தில் யார் உள்ளனர் என்று கண்காணிக்க வேண்டும். இளம்பெண்களும் தாங்கள் செல்லும் இடங்கள், யாருடன் செல்கிறோம் என்பது குறித்த விபரங்கள், பயணம் செய்யும் வாகனங்களின் பதிவு எண், டிரைவர் விபரம் போன்றவற்றை தங்களது பெற்றோருக்கு தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் பாலியல் குற்றங்களை குறைக்க முடியும்.

தாய்-மகள் உறவு என்பது நல்ல தோழிகள் போல் இருக்க வேண்டும். பெண்கள் தங்களுக்கு இழைக்கப்படும் பாலியல் குற்றங்களுக்கு எதிராக போராட வேண்டும். இதுதவிர இளம் வயதினரிடையே பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.