சுழிபுரம், காட்டுப்புலத்தில் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சிறுமி கழுத்து நெரிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படாத போதும், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என்று உடற்கூற்றுச் சோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காட்டுப்புலம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் தரம் 1 இல் கற்கும் சி.றெஜீனா (வயது–-6) என்ற சிறுமி நேற்று முன்தினம் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டார். அவரது கழுத்து நெரிக்கப்பட்டமைக்கான அடையாளம் காணப்பட்டது. காதில் இருந்த தோடுகள் காணாமல் போயிருந்தன.
பாடசாலையில் இருந்து நேற்றுமுன்தினம் மதியம் ரெஜீனா வீடு திரும்பியிருந்தார். ரெஜீனாவின் தாய் சமுர்த்தி வங்கிக்குச் செல்ல வேண்டியிருந்தது. அங்கு சென்றுவிட்டு பிற்பகல் 3 மணிக்கு திரும்பியபோது றெஜீனாவைக் காணவில்லை.
தனது சகோதரியின் வீட்டுக்குச் சென்றிருக்கலாம் என்று நினைத்த றெஜீனாவின் தாய் அங்கு சென்றார். அங்கும் றெஜீனா இல்லை. உறவினர்களும், அயலவர்களும் றெஜீனாவைத் தேடத் தொடங்கினர்.
நீண்ட நேரத் தேடுதலின் பின்னர் கிணறொன்றில் சிறுமியின் உடல் இருப்பது அறியப்பட்டது. இது தொடர்பில் வட்டுக்கோட்டைப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.
வட்டுக்கோட்டைப் பொலிஸார் உடனடியாகச் சம்பவ இடத்துக்கு வந்தனர். கிணற்றுக்குள் இருந்து சிறுமியின் உடல் வெளியே எடுக்கப்பட்டது.
சிறுமியின் பாடசாலைச் சீருடையைக் காணவில்லை. சடலம் உள்ளாடையுடன் மட்டும் இருந்தது. காதில் இருந்த தோடுகளையும் காணவில்லை. சிறுமியின் கழுத்தில் கயிற்றால் இறுக்கியது போன்ற அடையாளம் தெரிந்தது.
இரவு 7 மணியளவில் மல்லாகம் நீதிவான் சம்பவ இடத்துக்குச் சென்றார். சடலத்தைப் பார்வையிட்டார். விசாரணைகள் மேற்கொண்டார்.
உடற்கூற்றுச் சோதனைக்காக உடலை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் ஒப்படைக்க உத்தரவிட்டார்.
நேற்று யாழ்ப்பாணம் போதனா மருத்துவனையில் உடற்கூற்றுச் சோதனை நடத்தப்பட்டது. சட்டமருத்துவ நிபுணர் உ.மயூரதன் தலைமையில் உடற்கூற்றுச் சோதனை நடத்தப்பட்டது.
சிறுமியின் கழுத்து கயிற்றால் இறுக்கப்பட்டமையால் அவர் உயிரிழந்துள்ளார். அவரது உடலில் நகக் கீறல்கள் காணப்படுகின்றன.
சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்படவில்லை. ஆனால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார் என்று உடற்கூற்றுச் சோதனையில் தெரிவிக்கப்பட்டது.
உடற்கூற்றுச் சோதனைகளின் பின்னர் சடலம் நேற்றுப் பிற்பகல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.