மாணவியின் படுகொலைக்கு நீதிகேட்டு மக்கள் சார்பில் போராட்டத்துக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

மக்களால் பிடித்துக் கொடுக்கப்பட்ட சந்தேகநபர்களை நீதிக்கு புறம்பாக பொலிஸார் விடுவித்தமைக் கண்டித்தும் மாணவியின் படுகொலைக்கு நீதிகேட்டும் நாளையும் நாளைமறுதினம் போராட்டங்கள் நடத்த சுழிபுரம் காட்டுப்புலம் மக்கள் சார்பில் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணம் முழுவதும் கடையடைப்பு நடத்தி மாணவியின் படுகொலைக்கு நீதிகோரவேண்டும் என காட்டுப்புலம் அபிவிருத்திச் சங்கம் சார்பில் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
சுழிபுரம் காட்டுபுலம் அ.த.க. பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி பயிலும் சிவனேஸ்வரன் றெஜீனா (வயது – 6 ) என்ற சிறுமி அப்பகுதி தோட்டக் கிணற்றிலிருந்து நேற்று திங்கட்கிழமை (25) மாலை சடலமாக மீட்கப்பட்டார்.

சம்பவத்தையடுத்து சிறுமியின் உறவினர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் நால்வர் பொலிஸார் அழைத்துச் செல்லப்பட்டு தடுத்து வைத்து விசாரணைக்கு உள்படுத்தப்பட்டனர். மேலும் இருவர் பின்னர் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டனர்.

அவர்களில் குற்றத்தை ஒப்புக்கொண்டார் என ஒருவரை மட்டும் பிரதான சந்தேகநபராக குறிப்பிட்ட வட்டுக்கோட்டை பொலிஸார், ஏனைய ஐந்து பேரையும் பொலிஸ் பிணையில் விடுவித்தனர்.

சந்தேகநபர்கள் 6 பேரையும் தாங்களே பிடித்துக் கொடுத்ததாக குறிப்பிடும் காட்டுப்புலம் மக்கள், நீதிக்கு புறம்பாக 5 சந்தேகநபர்களை நீதிவான் முன்னிலையில் முற்படுத்தாமல் பொலிஸார் விடுவித்துள்ளனர் என்று குற்றஞ்சாட்டுகின்றனர்.

பொலிஸாரின் இந்தச் செயற்பாடு தமக்கு அச்சத்தையும் – அதிருப்தியையும் ஏற்படுத்துவதாகக் கூறுகின்றனர்.

இந்த நிலையில் பொலிஸாரின் செயற்பாட்டை கண்டித்தும் மாணவியின் படுகொலைக்கு நீதிகேட்டும் சுழிபுரம் சந்தியில் நாளை காலை 7 மணிக்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

மேலும் சிறுமியின் படுகொலைக்கு நீதிகேட்டு வடக்கு முழுவதும் நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை கடையடைப்பு போராட்டத்தை முன்னெடுக்க காட்டுப்புலம் கிராம அபிவிருத்திச் சங்கம் கேட்டுள்ளது.

இதுதொடர்பில் அனைத்து தரப்புகளுடனும் நாளை பேச்சுக்கள் நடத்தப்படும் எனவும் அந்தச் சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இதேவேளை, ஆர்ப்பாட்டம் நடத்துவர்கள் பொலிஸாருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பவேண்டாம் என சிலரிடம் தனிப்பட்ட முறையில் கோரப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

வட்டுக்கோட்டை பொலிஸார் தொடர்பில் காட்டுப்புலம் மக்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் புலனாய்வு பிரிவு அறிக்கையிட்டுள்ளதையடுத்தே பொலிஸ் அதிகாரி ஒருவர் அரசியல் தரப்புகளிடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.