சிறுமி கொலை சந்தேகநபர்களை விடுவித்ததற்கு எதிர்ப்பு: சுழிபுரத்தில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்!

சிறுமி றெஜீனாவின் படுகொலைக்கு நீதிகேட்டு சுழிபுரம் சந்தியில் நூற்றுக் கணக்கான மாணவர்களும் பொது மக்களும் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தப் போராட்டம் இன்று காலை 7.15 மணிக்கு ஆரம்பமானது. மானிப்பாய்- பொன்னாலை வீதியை மறித்து போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

சுழிபுரம் காட்டுபுலம் அ.த.க. பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி பயிலும் சிவனேஸ்வரன் றெஜீனா (6) என்ற சிறுமி அப்பகுதி தோட்டக் கிணற்றிலிருந்து கொலை செய்யப்பட்ட நிலையில் கடந்த திங்கட்கிழமை (25) மாலை மீட்கப்பட்டார்.

சந்தேகநபர்கள் 6 பேரையும் தாங்களே பிடித்துக் கொடுத்ததாக குறிப்பிடும் காட்டுப்புலம் மக்கள், நீதிக்கு புறம்பாக 5 சந்தேகநபர்களை நீதிவான் முன்னிலையில் முற்படுத்தாமல் பொலிஸார் விடுவித்துள்ளனர் என்று குற்றஞ்சாட்டுகின்றனர்.

பொலிஸாரின் இந்தச் செயற்பாடு தமக்கு அச்சத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்துவதாகவும், பொலிசார் தற்போது தேடும் சந்தேகநபர் பற்றிய விடயங்களையும் தாமே அவர்களிற்கு வழங்கியதாகவும் கூறுகின்றனர்.