அராலியில் வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளையர்கள் அட்டகாசம்

அராலி களுவத்துறை வைரவர் கோவிலடியில் வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளையர்கள் இருவர் 3 மணி நேரம் சல்லடை போட்டுத் தேடி கோடி ரூபா பெறுமதியான 20 பவுண் தங்க நகைகள், பணம் மற்றும் பெறுமதியான பொருள்களை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

கொள்ளையர்களின் தாக்குதலுக்குள்ளான குடும்பப் பெண் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று (30) அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

அராலி களுவத்துறை வைரவர் கோவிலுக்கு அண்மையாகவுள்ள வீடொன்றுக்குள் கொள்ளையர்கள் இருவர் புகுந்தனர். அரைக்காற்சட்டையும் ரிசேட்டும் அணிந்திருந்தனர்.

முகத்தை மூடி துணிகட்டியிருந்தனர். கைகளுக்கு குளோஸ் போட்டிருந்தனர். குடும்பத்தலைவருக்கு கால் ஏலாத காரணத்தால் எதுவுமே செய்ய முடியவில்லை.

குடும்பப் பெண்ணை மிரட்டி அவர் அணிந்திருந்த தங்க நகைகளை புடுங்கி எடுத்தனர். மோதிரத்தை சவர்க்காரம் போட்டு உருவினார்கள்.

நேற்று (வெள்ளிக்கிழமை) கொண்டு வந்து தந்த வட்டிக் காசும் காசோலையும் எங்கே என்று கேட்டு குடும்பப் பெண்ணை தாக்கினார்கள். அவர் காசோலைகள் மற்றும் பணத்தை எடுத்துக் கொடுத்தார்.

அதிகாலை ஒரு மணி தொடக்கம் 4 மணிவரை சுமார் 3 மணி நேரம் சல்லடை போட்டு தேடி பெறுமதியான பொருள்களையும் எடுத்துச் சென்றனர்.

கொள்ளையர்களின் தாக்குதலுக்குள்ளான குடும்பப் பெண் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அத்துடன், உள்ளூராட்சித் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியில் அவர் போட்டியிட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.