காதல் உறவினை அறிந்து கொண்ட பாட்டியை கொன்று பொதிசெய்து கலஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காட்டுப் பிரதேசத்தில் வீசி எறிந்த உயர்தர வகுப்பு மாணவியையும் அவரின் காதலனையும் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை கண்டி மாவட்ட நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது குறித்த இருவரையும் எதிர்வரும் 10 ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
இதன்போது கட்டுகஸ்தோட்டை கஹால்ல பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயான குமாரி செனவிரட்ண என்ற வயோதிபப் பெண்ணே பேத்தியின் காதலனால் கொலை செய்யப்பட்டவராவார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
பெற்றோர் பொலன்னறுவையில் வசித்து வந்த நிலையில் பாட்டியின் தனிமை கருதி அவருடன் தங்கி கட்டுகஸ்தோட்டை பிரதேச பாடசாலை ஒன்றில் உயர்தரம் கற்று வந்த சந்தேக நபரான மாணவி சம்பவ தினமான கடந்த 24 ஆம் திகதி அம்பிட்டியைச் சேர்ந்த உயர் தரத்தில் கற்று வந்த மாணவனான தனது காதலனை இரவு இரகசியமாக வீட்டுக்கு வரவழைத்து தனது அறையில் தங்க வைத்து அதிகாலை வெளியில் அனுப்பிய சமயம் பாட்டி அதனை கண்டுள்ளார்.
இதனையடுத்து பேத்தியையும் குறித்த இளைஞனையும் கடுமையான தொனியில் ஏசி சத்தமிட்டுள்ளதாக தெரியவருகிறது.
இச்சந்தர்ப்பத்தில் தமது இரகசிய காதல் உறவு பாட்டிக்கு தெரிய வந்ததால் அதிர்ச்சிக்குள்ளான இருவரும் பாட்டியை கட்டுப் படுத்துவதற்கு வேறு வழி தெரியாது திகைத்து நின்றுள்ளனர். இதன்போது காதலனான குறித்த இளைஞர் வீட்டுக் கதவிற்கு பாதுகாப்பாக போடப்பட்டிருந்த பொல் ஒன்றை எடுத்து பாட்டியின் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் அவர் ஸ்தலத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் அவரின் சடலத்தை பை ஒன்றில் சுற்றி கட்டிலுக்கு அடியில் போட்டுவிட்டு இருவருமாக இணைந்து வீட்டை கழுவி தடயங்களை அழித்துள்ளனர்.
மறுநாள் 25 ஆம் திகதி இருவருமாக சேர்ந்து கண்டி நகருக்குச் சென்றுள்ளனர். அங்கு மாலைவரை சுற்றித்திரிந்து, சடலத்தை வீசி எறிவதற்கான இடத்தை தேடியுள்ளதோடு அன்று மாலை கார் ஒன்றை வாடகைக்கு பெற்று சந்தேக நபரான மாணவனே காரை செலுத்தி வந்துள்ளதோடு இடையில் அதன் இலக்க தகடுகளை கழற்றி எடுத்து கொண்டு வீட்டுக்குச் சென்றுள்ளனர்.
பின்னர் தாம் கடையில் வாங்கி வந்த கறுப்பு நிற பொலித்தீன் பைகளில் சடலத்தை போட்டு பிளாஸ்டரினால் நன்றாக ஒட்டி பொதி செய்து இரவு ஒரு மணியளவில் காரில் எடுத்துச் சென்று கலஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிதுள்முல்ல தோட்டப்பகுதி பற்றைக்காட்டுக்குள் வீசி எறிந்து விட்டு வரும் வழியில் கொலையுண்ட பெண்ணின் உடைகளை கண்டி நகரில் உள்ள சாக்கடைக்குள் போட்டுள்ளனர்.
இதன்பின் காதலனை வழியனுப்பிவிட்டு மறுநாள் 26 ஆம் திகதி காலை பாட்டியை காணவில்லை என உறவினர்களுக்கு தொலைபேசி மூலம் மாணவி அறிவித்துள்ளார்.
அன்றைய தினம் உயிரிழந்த பெண்ணின் மகளினால் தனது தாய் காணாமல் போயுள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய பல்வேறு கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார் குறித்த மாணவியிடம் மேற்கொண்ட தீவிர விசாரணைகளின் பொழுதே மேற்கூறிய விடயங்களை அவர் வாக்குமூலமாக வழங்கியுள்ளார்.
சடலம் வீசப்பட்ட இடத்தையும் அடையாளம் காட்டியுள்ளார்.
இதையடுத்தே குறித்த மாணவியும் அவரின் காதலனும் கைது செய்யப்பட்டு நீதிவான் முன்னிலையில்ஆஜர் செய்யப்பட்டனர். இதனையடுத்து இருவரையும் விளக்கமறியலில் வை க்குமாறு நீதிவான் உத்தரவு பிறப்பித்தார்.