அநாகரிகமாக நடந்து கொண்ட அரச உத்தியோகத்தர்களுக்கு எதிராக நடவடிக்கை!

யாழ்.மாவட்டத்தில் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்வில் அரச உத்தியோகத்தர்கள் அநாகரிகமாக நடந்து கொண்டதாகவும் அது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும் படி யாழ்.மாவட்ட செயலர் சகல பிரதேச செயலர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.

ஜனாதிபதியின் சேவை 8ஆவது தேசிய நிகழ்ச்சி திட்டம் நேற்று முன் தினம் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் பெருமளவான அரச ஊழியர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் உரையாற்றும்போதும் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்து உரையாற்றும்போது அரச ஊழியர்கள் பெரும் கூச்சலிட்டு ஆரவாரித்தனர்.

இந்த நிலையில் இன்று யாழ்.மாவட்டத்தில் உள்ள சகல பிரதேச செயலர்களுக்கும் கடிதம் ஒன்று யாழ்.மாவட்ட செயலர் என். வேதநாயகனால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்வில் தங்கள் பிரதேச செயலக ஊழியர்கள் மற்றும் கிராம சேவகர்கள் அநாகரிகமாக நடந்து கொண்டமை அவதானிக்கப்பட்டுள்ளது.

ஆகவே இந்த விடயம் தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும்படி அந்த கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளது.