திலீபனின் தூபிக்கு அஞ்சலி செலுத்தி, நல்லூரில் போராட்டத்தை ஆரம்பித்தனர் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்!

வவுனியாவில் 500 நாள்களாக தொடர் போராட்டத்தை நடத்தும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய வளாகத்தில் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

தமது தொடர் போராட்டத்தின் 500ஆவது நாளை உலகுக்கு அறியப்படுத்தும் வகையில் வவுனியாவிலிருந்து வந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் இன்று காலை இந்த போராட்டத்தை ஆரம்பித்தனர். போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னதாக நல்லூர் ஆலய வளாகத்தில் உள்ள தியாகதீபம் திலீபனின் நினைவுத்தூபிக்கு மலரஞ்சலி செலுத்தினார்கள்.

எமது உறவுகள் தொடர்பில் உரிய பதிலை அரசு வெளியிடவேண்டும் என போராட்டத்தில் பங்கேற்றுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வலியுறுத்துகின்றனர்.

மாலை 4 மணிவரை இடம்பெறும் இந்தப் போராட்டத்தில் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தில் சிறப்பு பூசை வழிபாடுகளுடன் 108 தேங்காய் உடைத்தல், தீச்சட்டிகள் எடுப்பு என்பனவும் உறவுகளால் முன்னெடுக்கப்படவுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.