சிறுவன் உயிரை காப்பாற்ற தாலிக்கொடியை திருடிய விசித்திரம்!

சுழிபுரம் – பெரியபுலோவில் பகுதியில் சிறுவன் உயிரை காப்பாற்றுவதாக கூறி நூதனமான முறையில் சந்தேகநபர் ஒருவர் தாலிக் கொடியை திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் சர்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும், தெரியவருவதாவது,

பெரியபுலோவை சேர்ந்த இராசேந்திரம் டினு (வயது-14) என்ற சிறுவன் நோய்வாய்ப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார். இந்நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மகனின் நோய் குணமாக வேண்டுமாயின் தாலிக்கொடியில் சிகிச்சை செய்யவேண்டும் என்று சாமியார் ஒருவர் கூறியுள்ளார்.

மகனின் பிறந்த திகதி மற்றும் நேரம் போன்றவற்றைக் கேட்ட அந்த சாமியார் சிறிது நேர சிந்தனையின் பின்னர் மகனுக்கு கடும் தீவிரமான நோய் ஏற்பட்டுள்ளது. வீட்டில் கும்பம் வைத்து, கும்பத்தில் தாலிக்கொடி ஒன்றை வைத்து பூசை செய்த பின்னார் அத்தாலிக்கொடியை மகனின் உடம்பில் வைத்து வணங்கினால் மட்டுமே குணமாகும் என தெிவித்துள்ளார்.

அதை நம்பிய குடும்பத்தினர் தம்மிடம் தாலிக்கொடி இல்லாத நிலையிலும் உறவினர் ஒருவரிடம் ஓடிச் சென்று ஐந்தரைப் பவண் தாலிக்கொடியைப் பெற்றுவந்து அவரிடம் கொடுத்துள்ளனர்.

வீட்டில் கும்பம் வைக்கப்பட்டது. சில மந்திரங்களும் ஓதப்பட்டன. பூசைகள் முடிந்த பின்னர் குறித்த நகைப் பொட்டலத்தை கொழும்புக்குக் கொண்டுசென்று சிறுவனின் உடம்பில் வைத்து வணங்கிய பின்னர் மூன்றாம் நாள் வீட்டிற்கு கொண்டுவந்து சுவாமி அறையில் வைத்து அவிழ்த்து தாலியை எடுக்குமாறு அந்த ஆசாமி கூறிவிட்டு பூசைக்கான கொடுப்பனவையும் பெற்றுக்கொண்டு சென்றுள்ளார்.

குடும்பத்தினரும் அவசர அவசரமாக அன்றைய தினமே கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குச் சென்று மகனின் உடலில் வெள்ளைப் பொட்டலத்தை வைத்து வணங்கிவிட்டு நேற்று வீட்டிற்கு வந்து அதை அவிழ்த்தனர்.

தாலிக்கொடியைக் காணவில்லை. குறித்த போலி சாமியார் தாலியை திருடிச் சென்றுள்ளார்.

இதன்பின்னர் இது தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யவுள்ளதாக கூறியுள்ளனர்.

இதேவேளை, குறித்த சிறுவனுக்கு தலையில் இரண்டு அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு அவர் குணமாக உள்ளதாகவும் குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.