பிள்ளையாரின் காணியை ஆக்கிரமித்த புத்தர்!! (படங்கள்)

கிளிநொச்சி கிருஸ்ணபுரம் கிராமத்தில் முப்பது வருடங்களாக இருந்து வந்த பிள்ளையார் கோவிலின் காணியை கடந்த எட்டு வருடங்களாக பௌத்த ஆக்கிரமிப்பாக மாறியுள்ளதாக கிராம மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவில் உள்ள கிருஸ்ணபுரம் கிராமத்தில் காணப்பட்ட ஒரு அரச மரத்தில் கடந்த முப்பது வருடங்களாக பிள்ளையார் கோவில் ஒன்று காணப்பட்டு வந்திருக்கின்றது.

கிராமத்தைச் சேர்ந்த தனியார் ஒருவர் தனது காணியை பிள்ளையார் கோவிலுக்கு வழங்கியிருக்கின்றார். பிள்ளையார் கோவிலும் கிழக்கு திசையாக வீதியை பார்த்த படி சிறியளவில் அமைக்கப்பட்டு பொது மக்களால் வழிபாடு செய்யப்பட்டு வந்தது.

இந் நிலையில் 2009 இற்கு பின்னர் மீள் குடியேற்றத்தில் கிருஸ்ணபுரம் கிராமத்திற்கு மக்கள் வருகைதந்த போது பிள்ளையார் இருந்த அரச மரத்திற்கு கீழ் புத்தர் சிலை இருப்பதனையும் பிள்ளையார் கோவில் காணியில் சிறிய பௌத்த விகாரை அமைக்கப்பட்டு இருப்பதனையும் மக்கள் அவதானித்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இருந்த போதும் எவரிடமும் எதுவும் பேச முடியாத நிலையில் கடந்த எட்டு வருடங்களாக அமைதியாக இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிள்ளையார் சிலை இடம்மாற்றப்பட்டு அதே காணியில் பௌத்த விகாரைக்கு அருகில் வடக்கு திசையினை பார்த்தப்படி சிறியளவில் பிள்ளையார் ஆலயம் படையினரால் உருவாக்கப்பட்டுள்ளது.

கிழக்கு திசையிலிருந்த பிள்ளையார் ஆலயம் வடக்கு திசைக்கு திருப்பபட்டுள்ள நிலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரை கிழக்கு திசையில் வீதியை அண்மித்து காணப்படுகின்றது.

எனவே தங்களின் பிள்ளையார் ஆலயம் இருந்த அரச மரத்தடியில் தற்போது பௌத்த விகாரை இருப்பதனாலும் அங்கு பெரிய புத்தர் சிலை ஒன்று அமைக்கப்பட்டிருப்பதனாலும் மீண்டும் அந்த இடம் பிள்ளையார் கோவில் அமைப்பதற்கு கிடைப்பது என்பது சாத்தியமற்றது என பொது மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தங்களின் பிள்ளையார் ஆலயத்தை மீண்டும் ஆகம விதிப்படி கிழக்கு திசைக்கு மாற்றி அமைப்பதற்கு பல தடவைகள் இராணுவத்தினருக்கு தெரியப்படுத்திய போதும், இராணுவத்தினர் செய்து தருவதாக கூறியும் இது வரை அமைத்து தரவில்லை என பொது மக்கள் கவலை தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.