படுக்கை அறையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த புதுமண தம்பதிகள்: அதிர்ச்சியில் உறவினர்கள்

கேரளாவில் உள்ள வயநாடு மாவட்டத்தில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் புதுமண தம்பதிகளின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் வெளிமாநில பணியாளர்களை பொலிசார் விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

வயநாடு மாவட்டத்தின் மேக்கியாடு பகுதியில் குறித்த கொலை சம்பவம் நடந்துள்ளது. 28 வயதான உமர் மற்றும் அவரது மனைவி 20 வயதான பாத்திமா ஆகிய இருவரும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு அவர்களது படுக்கை அறையில் கிடந்துள்ளனர்.

இருவருக்கும் தலையில் பலமாக தாக்கியதன் காயம் இருந்துள்ளது. மட்டுமின்றி கத்தியாலும் குத்தப்பட்டுள்ளது பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

உடல்களை மீட்ட பகுதியில் இருந்து எந்த ஆயுதங்களையும் பொலிசார் கைப்பற்றியதாக தகவல் இல்லை.

வெள்ளியன்று காலை சுமார் 8.30 மணியளவில் உமரின் தாயார் தமது இன்னொரு மகனின் வீட்டில் இருந்து வந்துள்ளார்.

அப்போது உமரின் படுக்கை அறை கதவு திறந்த நிலையில் இருப்பதை கண்ட அவர் உள்ளே ரத்த வெள்ளத்தில் கிடந்த புதுமண தம்பதிகளை கண்டு வாய்விட்டு கதறியுள்ளார்.

இதனையடுத்தே அக்கம்பக்கத்தினர் கூடியுள்ளனர். தொடர்ந்து பொலிசாருக்கு தகவல் அளிக்க, அவர்கள் வந்து உடல்களை மீட்டுள்ளனர்.

வீட்டில் இருந்த நகைகள் எதுவும் களவு போகாத நிலையில், பாத்திமா அணிந்திருந்த வளையல் மற்றும் நெக்லேஸ் உள்ளிட்ட குறிப்பிட்ட நகைகள் மட்டுமே திருடப்பட்டுள்ளது பொலிசாரை குழப்பியுள்ளது.