ஆபத்தான கட்டடத்தின் நடுவில் 5 வருடங்களாக வாழ்ந்து வரும் தாய்!!

இறுதி யுத்தத்தில் சேதமாக்கப்பட்ட தனது சொந்த வீட்டை அரசாங்கம் இன்னமும் புனரமைத்து தரவில்லை என முள்ளிவாய்க்கால் பகுதியில் தாய் ஒருவர் கவலை தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராமசேவையாளர் பிரிவின் கீழ் வசித்து வரும் புனிதவதி மகேந்திரன் என்பவரே இந்த அவல நிலைக்கு உள்ளாகியுள்ளார்.

சுனாமி பேரனர்த்தத்தின் போது தனது கணவனை இழந்த குறித்த தாய் அவரது சொந்த முயற்சியில் முள்ளிவாய்க்காலில் வீடு ஒன்றை கட்டியுள்ளார்.

எனினும், குறித்த வீடு 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின்போது பாரிய குண்டுத் தாக்குதல்களினால் சேதமாக்கப்பட்டுள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு மீள்குடியேறிய குறித்த தாய் இன்றுவரை ஆபத்தான கட்டட உடைவுகளுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றார்

தமிழ் அரசியல் கட்சி தலைவர்களும், அரச அதிகாரிகளும் தனது இந்த நிலமையை அறிந்தும் தனக்கு உதவுவதற்கு எவரும் முன்வரவில்லை என அந்த தாய் குற்றம் சுமத்துகின்றார்.

அத்துடன், தான் தனித்து வாழ்வதை காரணம் காட்டிய அரச அதிகாரிகள் தன்னை தட்டிக்கழிக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.