மன்னாரில் பெண்ணை தள்ளிவிட்டு மோட்டார் சைக்கிளை பறித்துச் சென்ற ஊழியர்கள்!!

மன்னார் – ஓலைக்கொடு பகுதியில் பெண்கள் பயன்படுத்தும் மோட்டார் சைக்கிள் ஒன்றில் சென்ற 34 வயதுடைய குடும்பப் பெண் ஒருவரை பலவந்தமாக இறக்கிவிட்டு மோட்டார் சைக்கிளை நிறுவனத்தின் ஊழியர்கள் பறித்துச் சென்றுவிட்டதாக கூறப்படுகின்றது.

ஓலைக்கொடு பகுதியில் வீதியில் இன்று காலை சென்றுகொண்டிருந்த குடும்பப் பெண்ணிடம் ஊழியர்கள் நிலுவைப்பணம் செலுத்தவில்லை என்று தெரிவித்து வீதியில் வைத்து சைக்கிளை அபகரித்துச் சென்றுவிட்டதாக பாதிக்கப்பட்ட பெண் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பெண்ணுடன் வீதியிலிருந்து தர்க்கத்தில் ஈடுபட்டு தள்ளிவிட்டு தனது பாவனையிலிருந்த மோட்டார் சைக்கிளினை எடுத்துச் சென்றுவிட்டதாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இச்சம்பவம் குறித்து வவுனியாவிலுள்ள நிறுவனத்தின் பிராந்திய அலுவலகத்தினை தொடர்பு கொண்டு வினவியபோது,

கடந்த 4 மாதத்திற்கு மேலாக பெற்றுக்கொள்ளப்பட்ட மோட்டார் சைக்கிளின் நிலுவைப்பணம் செலுத்தப்படவில்லை.

குறித்த பெண் பாவிக்கும் மோட்டார் சைக்கிள் ஆண் ஒருவரின் பெயரில் உள்ளது. எமது நிறுவனத்திற்கு நிலுவைப்பணமாக 44,992 ரூபா செலுத்த வேண்டியுள்ளது.

மூன்று மாதகாலத்திற்குள் நிலுவைப்பணத்தினைச் செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் நான்கு மாத காலத்திற்கு மேலாகியும் கட்டுப்பணம் செலுத்தப்படவில்லை.

எனவே மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யும் முகவர்களிடம் குறித்த மோட்டார் சைக்கிளை கையகப்படுத்துமாறு எமது அலுவலகத்திலிருந்தும் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டு கடிதத்துடனேயே பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிட்டுள்ளார்.