சூப்பர் சிங்கர்- செந்தில் கணேஷ் முதல் வெற்றியாளர்!!

இசை மீது ஆர்வம் கொண்ட, அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்கும் மேடையாக இருந்து வருகிறது விஜய் தொலைக்காட்சி நடத்தும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி.

‘சூப்பர் சிங்கர்’ சீசன் 6 நிகழ்ச்சி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், யார் இதில் வெற்றி பெறுவார் என்கிற, எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

குறிப்பாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமான, ராஜ லட்சுமி மற்றும் செந்தில் கணேஷ் தம்பதிகளுக்கு பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தொடர்ந்து தங்களுடைய ஆதரவைக் கொடுத்து வந்தனர்.ஆனால் இறுதி சுற்றில் ராஜ லட்சுமி இல்லை என்பது பலருக்கும் வருத்தம்.

எனினும் அவரது கணவர் செந்தில் கணேஷ் இறுதி சுற்றிக்கு முன்னேறினார். 6 போட்டியாளர்கள் இறுதியில் கடுமையான போட்டியில் ஈடுபட்டனர். இந்த போட்டியில் சிறப்பு நடுவர்களாக, பாடகர் மாணிக்க விநாயகன், ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் சிறப்பு விருந்தினராக நடிகர் விஜய் சேதுபதி கலந்து கொண்டு போட்டியாளர்களை உற்சாக படுத்தினார்.

இந்தப் போட்டியில் இறுதிக்கு முன்னேறியுள்ள சக்தி, செந்தில் கணேஷ், மாளவிக்கா, ஸ்ரீகாந்த், ரக்ஷிதா என அனைவரும் போட்டி போட்டு தங்களால் முடிந்த வரை மிகவும் கடினமான பாடல்களை தேர்வு செய்து பாடி தங்களுடைய திறமையை வெளிப்படுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் யார் வெற்றி பெறுவார் என அனைவரும் எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருந்த போது… முடிவு அறிவிக்கபட்டது. முதல் பரிசு அனைவரும் எதிர்ப்பார்த்த நாட்டுபுற பாடல்களை பாடி ரசிகர்கள் மனதை கவர்ந்த செந்தில் கணேஷ்க்கு வழங்கப்பட்டது. இரண்டாவது பரிசு ரக்ஷிதாவிற்கும், மூன்றாவது பரிசு மாளவிக்காவிற்கும் வழங்கப்பட்டது.

மேலும்ராஜ லட்சுமிக்கு 5 லட்ச ரூபா பரிசும், ‘மக்கள் குரல்’ என்கிற பட்டமும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

நாட்டுபுற பாடல்களை மேடையேற்றி, முதல் பரிசை வென்றுள்ள செந்தில் கணேஷ்க்கு தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.