கல்குடாவில் சகோதரியை கூரிய ஆயுதத்தில் தாக்கிவிட்டு தற்கொலை செய்து கொண்ட சகோதரன்!

கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள பேத்தாழையில் 21 வயதுடைய இளைஞன் தமது சகோதரியின் மீது கூரிய ஆயுதமொன்றினால் தாக்கிவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாழைச்சேனை கண்ணகி புரத்தினை சேர்ந்த துரைராசா பிரதீபன் என்பவரே நேற்று முன்தினம் மாலை இவ்வாறு தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

பேத்தாழையிலுள்ள தமது உடன் பிறவா சகோதரியின் வீட்டிற்கு சென்றிருந்த வேளையிலேயே அங்கிருந்த படுக்கை விரிப்பினால் களுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதேவேளை, சகோதரியினை கத்தியினால் வெட்டி காயத்தினை ஏற்படுத்தியுள்ளார். அத்துடன், தமது துவிச்சக்கர வண்டியினையும் கையில் வைத்திருந்த கத்தியினால் அடித்து சேதப்படுத்தியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

சகோதரி வீட்டில் தமது உயர்கல்விக்கான பாடங்களை படித்துக்கொண்டிருந்த வேளை இறந்தவருக்கும் சகோதரிக்கும் இடையில் இடம்பெற்ற பிரச்சினை ஒன்றின் காரணமாக இவர் சகோதரியினை தாக்கிவிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று கூறப்பட்ட போதிலும் இது வரை காரணம் கண்டறியப்படவில்லை என்றும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இதேவேளை, இது தொடர்பிலான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.