மன்னா காலத்தில் மாடுகள் குளத்தில் நீர் அருந்திவிட்டு உடலை உரசிச் செல்வதற்காக மட்டுவில் பகுதியில் நடப்பட்டிருந்த இரு ஆவரஞ்சிக் கற்களில் ஒன்றினை புதையல் இருப்பதாக நம்பி தோண்டியுள்ளனர் இனந்தெரியாத சிலர்
மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்பாள் கோவிலுக்கும் வண்ணாத்திப் பாலத்திற்குமிடையில் கனகன்புளியடி – புத்தூர் சாலையில் நீண்ட காலமாக காணப்பட்ட ஆவரஞ்சிக் கல்லினையே அப்புறப்படுத்தி ஆழமாகத் தோண்டியுள்ளனர்.
அப்பகுதியில் குங்கும நீர் தெளித்த நிலையிலும் பல இடங்களில் தேசிக்காய் வெட்டியும் காணப்படுவதால் ஆவரஞ்சிக் கல்லின் கீழ் புதையல் இருக்கலாமென கருதி தோண்டியிருக்கலாமென அப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.
மூன்ற வருடங்களுக்கு முன்னர் இனந்தெரியாதோர் ஆவுரஞ்சிக்கல் இருந்த இடத்தில் தோண்டி கல்லினை அப்புறப்படுத்தியிருந்தனர்.இதனையறிந்த தென்மராட்சி பிரதேச செயலகத்தினர் பாதுகாப்பிற்காக அதனை எடுத்துவந்து மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்பாள் ஆலயத்திற்கு அருகில் நாட்டி வைத்திருந்தனர்.
தொல்லியல் திணைக்களத்தினர் அப் பகுதியில் ஆய்வுகளை மேற்கொண்ட பின்னர் கல்லினை அந்த இடத்தில் வைக்குமாறு அறிவித்ததையடுத்து முன்னர் காணப்பட்ட இடத்தில் நாட்டி பாதுகாப்பினை ஏற்படுத்தியிருந்தனர்.
அவ்வாறான பாதுகாப்பினை ஏற்படுத்தியிருந்த இடத்தில் முன்னர் தோண்டியதைவிட கூடுதலான ஆழத்திற்குத் தோண்டி கல்லினை அப்புறப்படுத்தியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டது.
தொல்லியல் திணைக்களத்தினால் மூன்று மாதங்களுக்கு முன்னர் மட்டுவில் ஆவுரஞ்சிக் கற்கள் காணப்படும் இடத்தினையும் நுணாவில் பகுதியில் சுமைதாங்கி உள்ள இடத்தினையும் தொல்லியல் பிரதேசமாக அறிவித்துள்ள நிலையில் விஷமிகளின் செயல் குறித்து பொதுமக்கள் கவலை தெரிவித்தனர்.