குழியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள்

யாழ்ப்பாணம் – நாயன்மார்காடு, கல்வியங்காடு பகுதியில் குடிநீர் திட்டத்திற்காக வெட்டப்பட்ட குழியில் இருந்து நேற்று மனித எச்சங்கள் வெளியாகியுள்ளது.

இதனால் அப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது..

குறிப்பிட்ட பகுதியில் இரணைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்திற்காக குடிநீர் விநியோகத்தினை மேற்கொள்வதற்காக நிலக்கீழ் நீர்த்தாங்கிகளை மேற்கொள்ளும் பணியை இந்திய நிறுவனமொன்று மேற்கொண்டு வருகின்றது.

குறிப்பிட்ட பணிகளிற்காக சுமார் 3 அடி ஆழத்திற்கு குழிகள் தோண்டப்பட்டவேளையே நிலத்தின் கீழ் இருந்து மனித எச்சங்கள் வெளிப்பட்டுள்ளன.

அதனைத் தொடர்ந்து நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பிரதான பொறியியலாளருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு பொறியியலாளரும், யாழ்.பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் உத்தியோகத்தர்களும் வருகை தந்து மனித எச்சங்களை பார்வையிட்டனர்.

முன்னர் இராணுவகாவரலன் அமைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்தே மனித எச்சங்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.