வடமராட்சி மீனவரின் படகுக்குத் தீ வைப்பு- கடலட்டை விவகாரத்தின் எதிரொலி!!

வடமராட்சி கிழக்குப் பகுதியில் பிறமாவட்ட மீனவர்கள் மேற்கொள்ளும். கடலட்டை தொழிலை பிடிக்கச் சென்ற உள்ளூர் மீனவரின் படகு நேற்று அதிகாலை இனம் தெரியாதோரினால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.

கட்டைக்காட்டுப் பகுதியில் கடற்படைத் தளத்திற்கு அருகில் நிறுத்தி வைத்திருந்த செபமாலை சுஜீபன் என்பவருக்குச் சொந்தமான படகு மற்றும் இயந்திரம் , வலைகள் என்பனவே இவ்வாறு தீயிட்டு கொழுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நீரியல் வளத் திணைக்களத்திற்கு சொந்தமான கடற்பிரதேசத்திற்கு உட்பட்ட கட்டைக்காட்டுப் பிரதேசத்தில் உள்ள கடற்படைத் தளத்தின் முன்பாக குறித்த படகின் உரிமையாளர் படகினை நிறுத்தி வைப்பது வழமையாகும். அவ்வாறு படகை நிறுத்தி வைக்கும் குறித்த படகின் உரிமையாளர் அண்மையில் உள்ளூர் மீனவர்களும் மாகாண சபை உறுப்பினர்களும் இணைத்து சட்டத்திற்கு முரணாக இரவு வேளையிலும் கடல் அட்டை பிடித்தவர்களை பிடித்த செயல்பாட்டில் பங்குகொண்டிருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு தீயிட்டு கொழுத்தப்பட்ட கடல் உபகரணங்களின் பெறுமதி தற்போது 5 லட்சம் ரூபா எனவும் குறித்த மீனவரால் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.