எல்.ரீ.ரீ.ஈ அமைப்பிற்கு எமில்காந்தனூடாக ரூ.200 மில்லியன் நிதி வழங்கப்பட்டது!!

ஜாதிக்க ஹெல உறுமய உறுப்பினர் நேற்று நீதிமன்றில் சாட்சியம்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வீடமைப்பு பணிகளுக்கு எனும் பெயரில் 200 மில்லியன் ரூபாய் எல்.ரீ.ரீ.ஈ தலைவர் எமில் காந்தனுக்கூடாக அவ்வமைப்பிற்கு வழங்கப்பட்டதாக ஜாதிக்க ஹெல உருமய கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினரான நிஷாந்த சிறி வர்ணசிங்க நேற்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

நிஷாந்த சிறி வர்ணசிங்க

“இது பாரதூரமான குற்றமாகும். பொது மக்களின் பணம் எம்மைத் தாக்குவதற்காகத் திட்டமிட்டிருந்த பயங்கரவாத அமைப்பினருக்கு வழங்கப்பட்டுள்ளது. மேற்படி வீடமைப்பு திட்டத்துக்காக அமைச்சரவையிடமிருந்து எவ்வித அனுமதியும் பெறப்பட்டிருக்கவில்லை.

டிரான் அலஸே ராடா அமைப்பின் தலைவராக செயற்பட்டிருந்தார்,” என்றும் சாட்சியாளர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இச்சம்பவம் தொடர்பில் ஊழலுக்கு எதிரான முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தான் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடொன்றை செய்ததாகவும் சாட்சியாளர் தெரிவித்தார்.

எல்.ரீ.ரீ.ஈயினரின் பிடியிலிருந்த மாவிலாறு அணைக்கட்டைத் திறப்பதற்காக அந்தப்பிரதேசத்துக்கு சென்றிருந்த அத்துரலிய ரத்தன தேரர், அக்மீமன தயாரத்ன தேரர் மற்றும் தன்னை உடனடியாக அப்பிரதேசத்தை விட்டு வெளியேறுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபஷவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜாஷவும் உத்தரவு பிறப்பித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

.2006 ஆம் ஆண்டு ராடாவில் 200 மில்லியன் ரூபாய் மோசடி இடம்பெற்றதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் மற்றும் மூவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது இந்த வழக்கின் முதல் சாட்சியாளரான வர்ணசிங்க நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகியபோதே மேற்படி தெரிவித்தார்.

“அச்சந்தர்ப்பத்தில் ஜாதிக்க ஹெல உருமயவின் தலைவர் சம்பிக்க ரணவக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபஷவால் அலரிமாளிகைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

அதன்போது ரத்தன தேரர் தலைமையிலான குழுவை மாவிலாறிலிருந்து கொழும்புக்கு வருமாறு சம்பிக்க ரணவக்க ஊடாகவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது,” என்றும் வர்ணசிங்க நீதிமன்றத்தில் கூறினார்.

மேலும் மாவிலாறு விடயம் தொடர்பில் எல்.ரீ.ரீ.ஈ அமைப்பின் முக்கியஸ்தரான எமில்காந்தனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அச்சந்தர்ப்பத்திலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபஷ அமைச்சர் சம்பிக்க ரணவக்கவிடம் கூறியிருந்ததாகவும் அவர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.

“மாவிலாறு பிரதேசத்தை விட்டு வெளியேறுமாறு எமக்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபஷவே உத்தரவு பிறப்பித்திருந்தார்.

நாம் கல்லாறு இராணுவ முகாமுக்கு அழைத்து வரப்பட்டு பின்னர் அங்கிருந்து வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டோம்,” என்றும் சாட்சியாளர் தெரிவித்தார்.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் களுவாரச்சி முன்னிலையில் நேற்று நீதிமன்றத்தில் ஆஜரான போதே வழக்கின் முதல் சாட்சியாளரான நிஷாந்த வர்ணசிங்க மேற்படி தெரிவித்தார்.

இதற்கான சாட்சியங்களை பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப்பா பீரிஸ் வழங்கினார். இதன்போது எதிர்வரும் வழக்கில் முதல் சாட்சியாளரிடம் குறுக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்படுமென அறிவிக்கப்பட்டது.

‘ராடா’ அமைப்பின் மோசடி தொடர்பில் சட்ட மா அதிபர், ‘ராடா’ அமைப்பின் முன்னாள் தலைவர் டிரான் அலஸ், எல்.ரீ.ரீ.ஈ யின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் நிதிக்குப் பொறுப்பான தலைவர் எமில்காந்தன், ‘ராடா’ வின் முன்னாள் பிரதம செயற்பாட்டு அதிகாரி சாலிய விக்கிரமசூரிய மற்றும் டொக்டர்.ஜயந்த டயஸ் சமரசிங்க ஆகியோருக்கு எதிராக குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

இந்த வழக்கின் இரண்டாவது சாட்சியாளரான எமில்காந்தன் சமூகமளிக்காத பட்சத்திலும் வழக்ைக தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு மேல் நீதிமன்றம் சட்டமா அதிபருக்கு அனுமதி வழங்கியுள்ளது.

அத்துடன் சட்ட மா அதிபர் திறைசேரியின் முன்னாள் செயலாளர் பி.பி ஜயசுந்தர, அமைச்சர் சம்பிக்க ரணவக்க, மாகாணசபை உறுப்பினர் நிஷாந்த வர்ணசிங்க ஆகியோரை சாட்சியாளர்களாக குறிப்பிட்டுள்ளார்.