வவுனியாவில் கோரவிபத்து- 8 வயதுச் சிறுவன் உயிரிழப்பு- – 8 மாணவர்கள் உட்பட 9 பேர் படுகாயம்!!

வவுனியா புளியங்குளம் புதூர் சந்திபகுதியில் இன்று மதியம் 12 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் 8 ஆரம்ப பிரிவு மாணவர்கள் உட்பட 9 பேர் படுகாயமடைந்தனர்.

பாடசாலை முடிந்ததும் ஆரம்பப்பிரிவு மாணவர்களை ஏற்றிக் கொண்டு முச்சக்கரவண்டி புதூர் சந்தி நோக்கிச் சென்றுள்ளது. அவ்விடத்தில் ஒரு மாணவரை இறக்கியதுடன், முச்சக்கர வண்டி திரும்ப முற்பட்டபோது கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த அரச பேருந்து மோதித் தள்ளியது. அதில் முச்சக்கரவண்டி தூக்கி வீசப்பட்டதுடன் அதிலிருந்த மாணவர்களும் படுகாயமடைந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்தவர்களை உடனடியாக அவ்வழியால் வந்த வாகனங்கள் ஏற்றியதுடன், புளியங்குளம் பிரதேச வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர். அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக மாணவர்கள் வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

விபத்தில் 8 வயது மாணவன் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் 8 மாணவர்களும் முச்சக்கரவண்டியை ஓட்டிய சாரதியுமாக 9 பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.விபத்து தொடர்பான விசாரணைகளை புளியங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.