மன்னார் மனித புதைகுழி விவகாரம் : தாய்க்கு பக்கத்தில் பிள்ளை : பதற வைக்கும் காட்சி!!

மன்னார் ‘சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் இன்றையை மனித புதைகுழி அகழ்வின் போது, மனதை கனப்படுத்தும் விதமாக தாய் ஒருவரும் அவர் அருகே பச்சிளம் குழந்தை ஒன்றின் மனித எச்சமும் அடையாளம் காணப்பட்டு மீட்கப்பட்டுள்ளது.

மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகள் இன்று காலை 43 வது தடவையாக ஆரம்பிக்கப்பட்டது.

மனித புதைகுழி அகழ்வின் போது சந்தேகத்திற்கு இடமான ஒரு முதிர்ந்த மனித எச்சமும் அதன் அருகே சிறிய எழும்புகளை கொண்ட மனித எச்சமும் காணப்பட்டதை தொடர்ந்து குறித்த இரு மனித எச்சங்களையும் சூழ்ந்திருந்த களிமண்ணை அகற்றிய சந்தர்ப்பத்தில் அருகருகே புதைக்கப்பட்டிருக்கும் தாயும் பிள்ளையும் என சந்தேகிக்கப்படுகின்ற வகையில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட இரு மனித எலும்புக்கூடுகள் தொடர்பாக எந்த வித துல்லியமான கருத்துக்கள் தங்களால் கூற முடியாது எனவும் முழுமையான பரிசோதனைகளின் பின்னரே கருத்துக்கள் தெரிவிக்க முடியும் எனவும் மேற்படி அகழ்வு பணிகளில் ஈடுபட்டு வரும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இதுவரை மீட்கப்பட்டுள்ள மனித எச்சங்களை உடற்கூற்று பரிசோதனைக்காக அமெரிக்காவில் உள்ள புளோரிடாவுக்கு அனுப்பி வைப்பதற்கான பரிந்துரையை நீதிமன்றத்திற்கு தாங்கள் முன்வைத்துள்ளதாகவும், இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட எந்த முடிவுகளும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்தனர்.

தற்போது வரை மன்னார் மனித புதை குழியிலிருந்து 60 மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.