அக்காவை கொன்ற தம்பி! இதுதான் காரணம்?

ஈரோடு மாவட்டம், சென்னிமலை நெசவாளர் காலனியை சார்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் தனசேகர் (24) நிரந்தரமான வேலையில்லாமல் அவ்வப்போது கிடைக்கும் கூலி வேலைகள் செய்து வருகிறார்.

இதே நெசவாளர் காலனியில் வசித்து வருபவர் ஆறுமுகம், இவரது மனைவி சிந்து (27). ஆறுமுகம் சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்திலும், சிந்து சென்னிமலையில் உள்ள தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்திலும் பணியாற்றி வருகின்றனர்.

தனசேகர் சிந்துவுக்கு உறவினர். தம்பி முறை. பல வருடங்களாக சிந்து வீட்டாரோடு நெருங்கி பழகி வருகிறார். இந்த நிலையில் சிந்துவின் கணவர் ஆறுமுகம் தனசேகரிடம் குடும்ப செலவிற்கு ஐந்தாயிரம் பணம் கேட்டுள்ளார்.

நேற்று முன்தினம் ஆறுமுகத்தை தொடர்பு கொண்ட தனசேகர் தோப்புபாளையம் கிராமத்தில் உள்ள நண்பர் ஒருவர் பணம் தருவதாக செல்லியிருக்கிறார்.

நீங்களோ அல்லது அக்கா சிந்துவோ நேரில் வரவேண்டும் என கூற, ஆறுமுகம் நான் வேலையாக இருக்கிறேன் உன் அக்காவை அழைத்து செல் என கூறியுள்ளார்.

காலை பத்து மணிக்கு சிந்து வேலை செய்யும் நிறுவனத்திற்கு சென்று அவரை பைக்கில் அழைத்துச் சென்றுள்ளார் தனசேகர். பிறகு மாலை சுமார் 3 மணிக்கு ஆறுமுகத்தை சந்தித்த தனசேகரன் பணம் ஐந்தாயிரத்தை கொடுத்து விட்டு அக்காவை பனியம்பள்ளி என்ற இடத்தில் பஸ் ஏற்றி விட்டேன் என சொல்லியிருக்கிறார்.

ஆனால் தனது மனைவி சிந்துவின் செல் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்ததோடு அவர் வீட்டுக்கும் வரவில்லை. இரவாகியும் வீடு வந்து சேராததால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் தனசேகரனை விசாரித்துள்ளனர்.

அவர் குடிபோதையில் இருந்ததோடு முன்னுக்கு பின் முரனாக பேச சந்தேகமடைந்த அவர்கள் தனசேகரனை சென்னிமலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீசார் விசாரித்த போது, ஐந்து பவுன் நகைக்காக சிந்துவை கொன்று ஊத்துக்குளி அருகே உள்ள வனப்பகுதியில் பிணத்தை மறைத்து வைத்துள்ளதாக கூறியிருக்கிறார். நேற்று காலை 10 மணியளவில் தனசேகரனே சிந்துவின் பிணத்தை அடையாளம் காட்டினான்.

சம்பவ இடத்திற்கு பெருந்துறை டி.எஸ்.பி. ராஜ்குமார், சென்னிமலை ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள், ஆய்வு செய்தனர்.

மேலும் தனசேகரனை விசாரித்தபோது, எனக்கு சரியான வேலை இல்லாததால் பண நெருக்கடி ஏற்பட்டது. இந்நிலையில் ஆறுமுகம் பணம் கேட்டார்.

அதனால் ஒருவர் வட்டிக்கு பணம் கொடுப்பதாக அவளை பைக்கில் அழைத்து சென்றேன். அவள் கழுத்தில் இருந்த நகையை பார்த்ததும் என் மனது மாறியது.

விஜயமங்கலம் ரயில் நிலையம் அருகே சென்ற போது அங்கிருந்த வனப்பகுதியில் சென்றேன். அப்போது பைக்கில் இருந்து இறங்கிய சிந்து இங்கே எதற்காக என்னை அழைத்து வந்தாய் என தகராறு செய்தாள்.

அப்போது அங்கே கிடந்த கல்லை எடுத்து சிந்துவின் மண்டையில் அடித்தேன். அவள் மயங்கினாள் அப்போதும் அவள் உயிர் போகாததால், சிந்துவின் முந்தானையை எடுத்து கழுத்தை இறுக்கி கொலை செய்தேன்.

பின்னர் அவள் கழுத்தில் இருந்த ஐந்து பவுன் தாலிக்கொடியை கழட்டி வந்து எனது உறவினர் பெயரில் தனியார் வங்கியில் 60 ஆயிரத்திற்கு அடமானம் வைத்தேன்.

பின்னர் அதே பணத்தில் ஐந்தாயிரத்தை சிந்துவின் கணவரிடம் கொடுத்தேன். பின்னர் எனக்கிருந்த கடன்களை முழுவதும் அடைத்தேன். சிந்துவின் கணவரிடம், சிந்து பஸ் ஏறி வீட்டிற்கு போய்விட்டதாக பொய் சொன்னேன். எனக்கு ஏற்பட்ட பண நெருக்கடியால் தான் கொலை செய்தேன் என போலீசிடம் முதலில் கூறியுள்ளான்.

கொலையான சிந்துவுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. சிந்துவின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளளது.

நகைக்காக இந்த கொலை சம்பவம் நடந்துள்ள என்று தெரிய வந்ததாலும், கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் இருக்குமா என்று போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.