வவுனியாவில் 26 வயதான குடும்பஸ்தர் திடீரென மர்மமான முறையில் உயிரிழப்பு..

வவுனியாவில் 26 வயதான குடும்பஸ்தர் ஒருவர் திடீரென மர்மமான முறையில் உயிரிழந்துள்ளமை அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா, ஓமந்தை பொலிஸ் பிரிவிலிலுள்ள மாதர்பனிக்கர் மகிழங்குளம் பகுதியில் வசித்து வந்த ஜெ. நிரோசன் என்பவரே நேற்றைய தினம் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, ஓமந்தை மாதர்பனிக்கர்மகிழங்குளம் பகுதியில் வசித்து வந்த குறித்த நபர் உறவினர் ஒருவரது வீட்டில் இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றின் மதுபான விருந்துபசாரத்தில் கலந்து கொண்டுள்ளார்.

இதில் உறவினர்களுடன் கலந்து கொண்டு மது அருந்திய பின்னர், அவரது வீட்டிற்கு உறவினர்கள் கூட்டிச்சென்று விட்டுள்ளனர், எனினும் நேற்று இரவு அவருக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதையடுத்து அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

எனினும், வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது அவர் உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் அவர் அருந்திய மதுபானத்தில் விஷம் கலக்கப்பட்டிருக்கலாம் எனவும் உயிரிழந்தவரின் குடும்பத்தார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

எது எவ்வாறிருப்பினும், அவர் உயிரிழந்ததற்கான காரணம் தொடர்பில் பிரேத பரிசோதனையின் பின்னரே தெரியப்படுத்தப்படும் என வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.