சண்டிலிப்பாய் சீரணி நாகபூசணி அம்பாள் ஆலயத்துக்குப் பின்பாக, முன்னாள் ஆதீன கர்த்தாவின் சடலத்தைப் புதைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
ஆதீன கர்த்தாவாக இருந்த தம்பையா பரஞ்சோதி கடந்த வியாழக்கிழமை உயிரிழந்தார். அவரது சடலத்தை ஆலயத்துக்குப் பின்பாக புதைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
குடிமனைகள் அந்தப் பகுதியில் உள்ளது. ஆலயப் பூசகரின் வீடும் அருகில் உள்ளது. இவ்வாறான இடத்தில் சடலத்தைப் புதைப்பது பொருத்தமற்றதாக இருக்கும் என்று ஊர்மக்கள் வலி.தென்மேற்குப் பிரதேச சபைக்கு முறைப்பாடு தெரிவித்துள்ளார்கள்.
மானிப்பாய் பொலிஸாருக்கு பிரதேச சபையினால் தகவல் வழங்கப்பட்டது. பொலிஸார் நேற்று நேரில் சென்று விசாரணைகளை நடத்தினார்கள். ஆலயத்துக்குப் பின்பாக சடலத்தைப் புதைப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.
பொலிஸார் நீதிமன்றுக்கு விடயத்தைப் பாரப்படுத்தியுள்ளார்கள். இன்று காலை இது தொடர்பில் விசாரணை இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.