யாழில் இளைஞரை மோதி, படுகாயமடையச் செய்து விட்டு சப்பாத்துக் கால்களால் முகத்தில் தாக்கிய பொலிஸார் – கொக்குவிலில் பதற்றம்

இந்தச் சம்பவம் நேற்று (August 05) மாலை 6.15 மணியளவில் கொக்குவில் பொற்பதி வீதியில் இடம்பெற்றது.

கோப்பாய் பொலிஸ் உத்தியொகத்தர்களே இந்த அடாவடித் தனத்தை முன்னெடுத்தனர் எனத் தெரித்து ஊர் மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இளைஞர் ஒருவரும் மாணவர் ஒருவரும் மோட்டார் சைக்கிளில் கொக்குவில் பொற்பதி வீதியில் பயணித்தனர்.

அவர்களைப் பொலிஸார் மோட்டார் சைக்கிளைக் குறுக்கேவிட்டு மறித்ததனால், நிலைகுலைந்த இளைஞர் விபத்துக்குள்ளாகினார்.

கால் முறிந்து தசைகள் தொங்கிப் படுகாயமடைந்து வீதியில் கிடந்த இளைஞரை பொலிஸார் இருவர் சப்பாத்துக் கால்களால் தாக்கியுள்ளனர்.

அத்துடன், ஏனைய இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இளைஞருடன் சென்ற மாணவரை அழைத்துச் சென்று தாக்கியுள்ளனர்.

அதனைக் கண்ட ஊர் இளைஞர்கள், படுகாயமடைந்த இளைஞரை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்த்தனர்.

கொக்குவில் பொற்பதி வீதியைச் சேர்ந்த ஏ.டெனிஸ்ரன் (வயது – 18) என்ற இளைஞனே வலது கால் முறிந்து தசைகள் கிளிந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

அவரது முகத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் சப்பாத்துக் காலால் தாக்கியதால் கண் புருவம் வீக்கமடைந்துள்ளது என வைத்தியசாலை தகவல் தெரிவித்தது.

கோண்டாவில் இராமகிருஷ்ணா மகா வித்தியால தரம் 11இல் பயிலும் சுஜீவன் என்ற மாணவனை தாக்கிவிட்டு பொலிஸார் அழைத்துச் சென்றுள்ளனர்.