5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் முன்னிலையில் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!

சிலாபம் கடற்கரையில் சிலருடன் நடந்து சென்ற 33 வயதான ஒரு பிள்ளையின் தாய் ஒருவர் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று (01.08.2018) மாலை நடந்துள்ளது.

குருணாகல், வாரியபொல பமுனாகொட்டு, கினிமான பிரதேசத்தை சேர்ந்த 33 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவருக்கு 7 வயதில் மகன் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த பெண் மேலும் சிலருடன் இன்று மதியம் முன்னேஸ்வரம் சிவாலயத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டு விட்டு, மதிய உணவின் பின்னர் சிலாபம் கடற்கரைக்கு சென்றுள்ளார்.

பிற்பகல் 2 மணியளவில் கடற்கரையில் நடந்து சென்று கொண்டிருந்த போது திடீரென வந்த ராட்சத அலையில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். கடலில் மூழ்கிய பெண்ணை காப்பற்ற முயற்சித்த போதிலும் அது கைக்கூடவில்லை.

அப்போது அங்கு வந்த நான்கு மீனவர்கள் கடலில் குதித்து கடும் சிரமத்திற்கு மத்தியில் பெண்ணை கரைக்கு கொண்டு வந்த போதிலும் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

சம்பவம் நடந்த நேரத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கடற்கரையில் இருந்துள்ளனர். கடலில் ஆபத்தான நிலைமை இருப்பதால், அலைகளிடம் செல்லும் போது கவனமாக இருக்குமாறு எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டுள்ளது.

அதனை பொருட்படுத்தாது சென்றதன் காரணமாகவே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. பெண்ணின் சடலம் சிலாபம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.