ஆசியாவை அதிர்ச்சியில் உறையவைத்த யாழ் தமிழச்சிகள்!

இன்று இலங்கையின் வலைப்பந்தாட்ட அணி ஆசியாவில் மகத்தான சாதனை படைத்துள்ளது. இதற்கு காரணமானவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரு தமிழ் வீராங்கனைகள் என்பது (தர்ஜினி, எழிலேந்தினி) தமிழர்களுக்கு கிடைத்த பெருமையாகும்.

உயர்ந்த மாணவி என வகுப்பறையில் பல அசௌகரியங்களை அனுபவித்துவந்த தர்ஜினி இன்று இலங்கையின் தேசிய அணி ஒன்றைத் தூக்கி நிமிர்த்தி நிற்கும் தூணாக விளங்குகின்றார்.

அவரது அபாரத் திறமை சொல்லற்கரியது. அதுபோலவே வலைப்பந்தாட்ட அணியில் உள்ள மற்றொரு தமிழ் வீராங்கனையான எழிலேந்தினி சேதுகாவலர். இவர்கள் இருவரும் இலங்கை வலைப்பந்தாட்ட அணியின் மிக முக்கியமான வீராங்கனைகளாகத் திகழ்கின்றனர்.

எம் மண்ணிலே தர்ஜினிபோல், எழிலேந்தினிபோல் ஏராளம் ஏராளம் வீரவீராங்கனைகள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கெல்லாம் தென்னிலங்கை எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றது என்பதுதான் கவனத்திற்குரியது.

அதுதவிர எமது வீரவீராங்கனைகளை தேசிய அணிகளில் இணைப்பதற்கான முயற்சிகளில் எமது விளையாட்டுத்துறை சார்ந்தவர்கள் எவ்வளவுதூரம் ஈடுபாடுகாட்டுகின்றார்கள் என்பதும் ஆய்விற்குரியதாகும்.

எல்லா அணிகளிலும் தென்னிலங்கையைச் சேர்ந்த வீரர்கள்தான் இடம்பெறவேண்டுமென்றில்லை, எமது வீரர்களுக்கும் உரிய களம் அமைத்துக்கொடுக்கப்படுமாயின் இலங்கையின் விளையாட்டுத்துறை மிக வேகமாக வளர்ச்சியடையும் என்பதுதான் இங்கு முக்கியமாகக் கூறவேண்டியது.