தற்கொலைக் குண்டு தாரிகள் ஆடைவாங்கிய விவகாரத்தில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்

தற்கொலைக் குண்டு தாரிகள் கல்முனையில் கடை ஒன்றில் ஆடைவாங்க செல்வதற்காகப் பயன்படுத்திய வேன் சாரதி மற்றும் வேனை வாடகைக்குக் கொடுத்த 3 பேரை இன்று செவ்வாய்க்கிழமை காலை மட்டு மாவட்ட புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

அத்தோடு குறித்த வேனையும் மீட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.எம்.டி. கீத்த வத்துர தெரிவித்தார்.

பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.எஸ்.சமந்த தலைமையிலான புலனாய்வு பிரிவினர் நேற்று திங்கட்கிழமை இரவு தற்கொலைக் குண்டு தாரிகள் ஆடைவாங்க பயன்படுத்திய வேனை கல்லடி பிரதேசத்தில் வைத்து மீட்டனர்

இதனை தொடர்ந்து வேனை ஓட்டிச் சென்ற வேன் பத்திரிகைகளை விநியோகிக்கும் ஏஜன்சியில் சாரதியாக கடமையாற்றிய காத்தான்குடி 4 ஆம் பிரிவு 3 ஆம் பழைய வீதியைச் சேர்ந்த 54 வயதுடைய அப்துல் ஹமீட் மொஹோமட் றிபாஸ் என்பவரை காத்தான்குடியில் வைத்து கைது செய்தனர் அதனை தொடர்ந்து வேனை வாடகைக்குக் கொடுத்த கல்லடி மற்றும் கூளாவடி பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் உட்பட மூவரை கைது செய்தனர்

இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட வேன் சாரதியான றிபாசிடம் தற்கொலை குண்டு தாரிகள் வேன் ஒன்றை வாடகைக்கு எடுத்துவரும்படி தெரிவிக்கப்பட்டதையடுத்து றிபாஸ் மட்டக்களப்பு கூளாவடி பிரதேசத்தைச் சேர்ந்த யூட் என்ற வேன் சாரதியிடம் வேன் ஒன்று வாடகைக்குத் தேவை என தெரிவித்ததையடுத்து யூட் கல்லடி பிரதேசத்தைச் சேர்ந்த எம். தனுஷன் என்பவரிடம் வேன் ஒன்று தேவை என தெரித்தார்

இதனையடுத்து தனுஷன் சோபனா என்பவரின் வேனை வாடகைக்கு எடுத்து யூட்டிடம் வாடகைக்கு வழங்கியுள்ளார், இதனை யூட் றிபாசிடம் வாடகைக்கு வழங்கியுள்ளார் எனவும் அந்த வேனில் தற்கொலைக் குண்டு தாரிகளான 3 பேரையும் குழந்தைகளை ஏற்றிச் சென்று கல்முனை பிரதேசத்தில் உள்ள கடை ஒன்றில் வெள்ளை ஆடைகளை கொள்வனவு செய்துள்ளதாக இறக்கிவிட்டதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

இதில் கைது செய்யப்பட்டவர்களைக் கொழும்பிலுள்ள சி.ஜ.டி யினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான விசாரணைகளை சி.ஜ.டி யினர் மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.