பிணைமுறி விவகாரம்: உடைகிறது குட்டு!

சர்ச்சைக்குரிய பிணைமுறி வழங்கல் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில், ‘பெர்ப்பெச்சுவல் ட்ரெஷரீஸ்’ நிறுவனம் தனது துணை நிறுவனங்கள் மூலம் பல மில்லியன் ரூபாவை காசாக்கியதாக அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

 

மேற்படி ஆணைக்குழுவில் சாட்சியமளித்த பெர்ப்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் அதிகாரி கௌஷிக ரணவீர இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

பெர்ப்பெச்சுவல் ட்ரெஷரீஸ் தனது துணை நிறுவனங்களுக்குப் பல மில்லியன் ரூபாவை பணப் பரிமாற்றம் செய்ததாகவும், அத்துணை நிறுவனங்களில் இருந்து குறித்த பெருந்தொகைப் பணம் அவ்வப்போது காசாக்கப்பட்டதாகவும், காசாக்கப்பட்ட பணம் எதற்காகச் செலவிடப்பட்டது என்பது குறித்துத் தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேற்படி துணை நிறுவனங்களின் பெயரிலான காசோலைகளை அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அவரது தந்தை ஜெஃப்ரி அலோசியஸ் ஆகியோரே ஒப்பமிட்டு வினியோகித்ததாகவும் கௌஷிக தெரிவித்துள்ளார்.

தான் இதுபோன்ற காசோலைகளைக் காசாக்கியதாகவும், அந்தப் பணத்தை பெர்ப்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தின் பிரதம நிர்வாக அதிகாரி கசுன் பலியசேனவிடம் ஒப்படைத்தாகவும், அவர் அலுவலகத்தில் இல்லாத சந்தர்ப்பங்களில் அவரது ஆசனத்தில் பணத்தை வைத்துவிட்டு வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.